வெள்ளை அறிக்கைகளின் விவரம்
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கைகளின் விவரம் வருமாறு:-
* கடந்த 1977ம் ஆண்டு முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, டிசம்பர் 29ந்தேதி, மாநிலத்தில் வீசிய புயல் மற்றும் வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின்மீது சட்டசபையில் 4 நாட்கள் விவாதம் நடைபெற்றது.
* 1981ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ந்தேதி எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, உணவு பொருட்களின் கையிருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 3 நாட்கள் விவாதம் நடைபெற்றது.
* 1983ம் ஆண்டு மார்ச் மாதம் 9ந்தேதி சட்டசபையில் தமிழகத்தில் நிலவிய வறட்சி நிலைமை குறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் விவாதம் நடைபெற்றது.
* அதற்கு அடுத்த ஆண்டு (1984) பிப்ரவரி 20ந்தேதி வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் மட்டுமே விவாதம் நடைபெற்றது.
* 1994ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதி, கடுமையான புயல், மழை, வெள்ள நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் மீது 2 நாட்கள் விவாதம் நடைபெற்றது.
* 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 3ந்தேதி கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, மழை, புயல், வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் விவாதம் நடைபெற்றது.
* 1998ம் ஆண்டு ஏப்ரல் 23ந்தேதி கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் விவாதம் நடந்தது.
* 2000ம் ஆண்டு மே 11ந்தேதி கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அரசு பணிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு பணிகளில் வழங்கிய இடஒதுக்கீடு, பின்னடைவு பணியிடங்கள் குறித்து முழுமையான தகவல் அடங்கிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் விவாதம் நடைபெற்றது.
* 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 18ந்தேதி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் அந்த அறிக்கையின்மீது விவாதம் நடத்தப்படவில்லை.
Comments