சிங்கப்பூர் ரமா சுரேஷ்

 தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆம்பலாப்பட்டு கிராமத்தில் பிறந்தவர். கடந்த 15வருடமாக சிங்கையில் வசிக்கும் இவர், 13 சிறுகதைகள் அடங்கிய ‘உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81’ என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் 2017 இல் ‘மோக்லி’ பதிப்பகத்தில் வெளியானது. சிங்கப்பூர் NAC நடத்திய தங்கமுனை விருதுகள் இவரது ராட்சசி (2015-இரண்டாம் பரிசு), ரகசியம் (2017/முதல் பரிசு) சிறுகதைகளுக்கு கிடைத்தது. இவரது சிறுகதை தொகுப்பிற்கு 2018 க.சீ.சிவக்குமார் நினைவு விருது கிடைத்தது.


"மாயா இலக்கிய வட்டம் ஆரம்பித்து எங்களின் நோக்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து உள்ளோம். எந்த அமைப்பின் நோக்கமும் அவ்வளவு எளிதில் நிறைவேறி விடுவதில்லை, புது வாசகர்களை கண்டடைந்து அவர்களை குறிப்பாக சிங்கப்பூர் கதைகளை படிக்க வைப்பது சவாலான ஒன்று, அதில் வெற்றியும் அடைந்துள்ளோம். வாசகர்கள் ஆவலுடன் வருகிறார்கள் தயக்கமின்றி தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்" என்கிறார்.
ஒரே ஒரு தொகுப்பை போட்டுவிட்டு ரமாசுரேஷ் எழுத்தாளர் என்று கை குழுக்க கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கு என்று கூறும் இவரது "உட்லண்ட்ஸ் ஸ்ரிட் 81" சிங்கப்பூர் பெண்கள் எழுதிய சிறுகதைகளிலிருந்து பெரிதும் மாறுபட்ட ஒன்று.
"நான் மனிதர்களின் செயல்பாடுகளை அதிகம் ரசிப்பவள் அதிலும் குறிப்பாக பெண்களை அதிகம் ரசிப்பேன் நேசிப்பேன். என் கதைகள் பெரும்பாலும் பெண்களின் அக வாழ்வை கொண்டவை.
2015 ல் ராச்சசி கதையை நான் எழுதும் போது எனக்கு நானே சில விசயங்களில் கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டேன் ஆனால் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் கதைகளை படிக்க ஆரம்பித்தபோது அந்த தடைகளை தகர்த்துவிட ஆரம்பித்தேன்" என்கிறார்.
"விளிம்பு நிலை மாந்தர்களின் கதையை தடையில்லாமல் எழுத எனக்குள் தைரியத்தை கொடுத்தது லஷ்மி சரவணக்குமாரின் உப்பு நாய்கள்தான். நிர்வாணம் என்ற ஒற்றை வார்த்தையே எனக்குள் கட்டுப்பாடாகத்தான் இருந்தது ஆனால் லஷ்மியின் கதைகளில் நிர்வாணத்தையே இரண்டு பக்கங்கள் எழுதி இருப்பார் அந்த மொழியை படிக்கையில் எனக்குள் நிறைய மாற்றம். உடல் அரசியல் பற்றி எழுதுவதில் தவறில்லை அதை நாம் எழுதும் விதத்தில்தான் உள்ளது என்பதை புரிந்துக்கொண்டேன்" என்று சொல்கிறார்.
இவரது கதைகளில் பூனைகள், குழந்தைகள், முதியவர்கள் அதிகம் வருகிறார்கள். "கதைகளில் பிரதான பாத்திரங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் . சிங்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பார்த்தால் இவர்கள் மட்டுமே நிறைந்து நிற்பார்கள். காலை பத்து மணி முதல் மாலை வரை குடியிருப்பு பகுதிகள் அங்காடி கடை வீதி என்று மனிதர்கள் அதிகம் நடமாட கூடிய பகுதிகளில் இவர்களின் சிரிப்பு சத்தமும் கேலியும் கிண்டலுமான பேச்சும் அதிகமாக கேட்கும் அவர்களுடன் சக நண்பனை போல பூனைகளும் இருக்கும். மேலும் சிங்கப்பூர் களத்தில் பூனைகள்தான் நமக்கு கிடைத்த ஒரே விலங்கும்!பெரியவர்கள் (முதியவர்கள்) குழந்தைகள் இவர்கள் இருவரும் கிட்டதட்ட ஒரே மனநிலையில் உடையவர்கள். பழகியவர்கள் புதியவர்கள் என்று பாராமல் பார்த்தவுடன் சிரித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு மனிதனிடமும் பல சுவாரசியமான கதைகள் இருக்கும் அதில் சில ரகசியங்கள் இருக்கும் அந்த ரகசியத்தை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகே சுவாரசியமாக வெளி வரும். அப்படிப்பட்ட ரகசியங்களை முதியவர்கள் குழந்தைகளிடம் மட்டுமே அடிக்கடி சொல்லி சிலாயித்துக் கொள்வார்கள். தங்களுக்கு புரியுதோ இல்லையோ அந்த சுவாரசியம் குழந்தைகளுக்கு பிடித்து விடும். உறவு பாசம் இதை தாண்டி ‘தனி கவனம்’ என்பதே இவர்களுக்கு தேவை" என்கிறார்.
நம் சொந்த கதை அல்லது நம்மை பாதித்த அல்லது கற்பனை கதை எதுவாக இருந்தாலும் சரி கதையின் உட்கரு எழுத்தாளனுக்குள் உயிர்ப்பிக்க வேண்டும் அந்த அதிர்வுதான் நம்மை கதை எழுத தூண்டுவதே என்று கூறும் இவர்
உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 மட்டும் அல்ல சிங்கப்பூர் தொகுப்புகள் எதுவும் இங்கு பேசப்படுவது இல்லை. ஆனால் தமிழகத்தில் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது எனச் சொல்கிறார்.
"இந்தத் தொகுப்பிற்கு முதல் பாராட்டு கவிஞர் கரிகாலன் அவர்களுடையது, அவரிடம் நான் பேசும் போதெல்லாம் அடுத்த கதையை எழுத ஆரம்பித்து விடுவேன் அந்தளவு ஊக்கப்படுத்துவார். சாரு அவர்கள் தொகுப்பை படித்துவிட்டு என் கைபேசி எண்ணை தேடி பிடித்து பேசிய அந்த தருணம் நான் தேவதை ஆகிவிட்டேன். சமீபத்தில் கவிஞர் யவனிகா அவர்களின் பாராட்டு.
எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தது க.சீ. சிவக்குமார் நினைவு விருது" என்கிறார்.
"வாசிப்பதின் வாயிலாக மட்டும் அல்ல, நாம் சந்திக்கும் பல சூழல்கள் நம்மை பல மாற்றங்களை கண்டடைய செய்கிறது. இதில் வாசகர்கள் மற்றவர்களை விட கொடுத்து வைத்தவர்கள் தனக்கு பிடித்த கதாப்பாத்திரமாக மாறி விடுவார்கள், சில நாட்களுக்கு முன்பு வானவில் என்ற ரஷ்ய நாவல் ஒன்று படித்தேன் அதில் வரும் ஒரு பிணமாக மாறி தவிக்க ஆரம்பித்து விட்டேன் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த கதை நிகழும் களமாகவே உருமாறி விட்டேன். ஏன் சில வாசகர்கள் தன் மானசீகமான எழுத்தாளர்களை போன்றே வாழ ஆரம்பித்து விடுவார்கள் உதாரணத்திற்கு எஸ்.ரா , சாருவின் தீவிர வாசகர்களை பார்த்தீர்கள் என்றால் மிக இயல்பாக நாம் கண்டுபிடித்து விடலாம். நான் சமீபத்தில் ரசித்த ஓஷோவின் வரிகள் “நீயாகப் படைக்கும் எதுவும் உன்னைவிட சிறியதாகத்தான் இருக்க வேண்டும்”. எழுத்தை விட எழுத்தாளன் சிறந்தவனாக விளங்க வேண்டும் அப்போதுதான் வாசகன் எழுத்தின் வாயிலாக மாற்றத்தை கண்டடைய முடியும்" என்று சொல்கிறார்.
பாண்டித்துரை என்பவர் இவரை திண்ணை இதழுக்கு செய்த நேர்காணலை படித்து இவரைப் பற்றி அறிந்து கொண்டேன். இவருடைய முகநூல் நட்பு எனக்கு இன்று கிடைத்தது. அதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தஞ்சாவூரில் இருந்து சென்று சிங்கப்பூரில் எழுத்தாளராகப் பயணிக்கும் இவர் மேலும் நிறைய படைப்புகளைக் கொண்டு வர வாழ்த்துகிறேன்

கந்தசாமி .ஆர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,