இன்ஸ்டன்ட் ரசப்பொடி

 இன்ஸ்டன்ட் ரசப்பொடி இப்படி அரைச்சு வச்சுக்கிட்டா போதும். சுடு தண்ணீர் காய வைக்கிற மாதிரி, ஈஸியா ரசம் வைக்கலாம்.



முதலில் ரசப்பொடி செய்ய மசாலா பொருட்களை வறுக்க வேண்டும். எந்தெந்த பொருட்களை எந்தெந்த அளவுகளில் சரியான பக்குவத்தில் எப்படி வறுப்பது. அடுப்பில் ஒரு கடாயை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 

அந்த கடாய் நன்றாக சூடானதும் முதலில் மிளகு – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – 2 டேபிள்ஸ்பூன், வரமல்லி – 100 கிராம், இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் ட்ரையாக 2 நிமிடம் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


அடுத்தபடியாக அதே கடாயில் துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், போட்டு இந்த இரண்டு பருப்புகளும் பொன்னிறம் வரும் வரை சிவக்க வைத்து இதையும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுத்தபடியாக அதே கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் அளவு ஊற்றி, அந்த எண்ணெய் காய்ந்ததும் முதலில் வெந்தயம் – 1 ஸ்பூன் போட்டு, வெந்தயத்தை பொன்னிறம் வரும் வரை சிவக்க வைத்துவிட்டு, அதன் பின்பு வறுபட்ட இந்த வெந்தயத்துடன் பூண்டு பல் – 15, வரமிளகாய் – 20, கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து இரண்டு நிமிடம் போல எண்ணெயில் நன்றாக வறுத்து இந்த பொருட்களையும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


இப்போது நாம் வறுத்த பொருட்கள் அனைத்தும் ஒரு தட்டில் தனியாக நன்றாக ஒன்றாக ஆறட்டும். இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இந்த ரசப்பொடி 90% அரைந்தால் போதும். அவ்வளவு தான். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டால் 1 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

சரி, அடுத்த படி இந்த ரச பொடியை வைத்து, ரசம் எப்படி வைப்பது என்பதை தெரிந்து கொள்வோமா? அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி, அந்த எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 கொத்து சேர்த்து தாளித்து, இதில் பழுத்த ஒரு பெரிய தக்காளியை உங்கள் கைகளாலேயே நசுக்கிப்போட்டு எண்ணெயில் ஒரு நிமிடம் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

தக்காளி எண்ணெயில் வதங்கியவுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் ரசப்பொடியிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து கடாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது எண்ணெயுடன் தக்காளி, நாம் போட்டிருக்கும் ரசப்பொடி இரண்டையும் நன்றாக இரண்டு முறை கலந்து விட்டு, அதன் பின்பு கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடாயில் ஊற்றி, ஒரு பெரிய டம்ளர் தண்ணீர்யும் ஊற்றி, ரசத்துக்கு தேவையான உப்பைப் போட்டு ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து விடுங்கள். ரசம் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லி தழைகளைத் தூவி இந்த ரசத்தை சாப்பிட்டு பாருங்கள். இந்த ரசம் கொதிக்கும் போதே இதன் வாசம் ஆளை தூக்கும். (புளி கரைசலுடன் சேர்த்து பெரிய டம்ளரில் 2 டம்ளர் அளவு ரசம் நமக்கு இதில் கிடைக்கும்.)

மிளகு ஜீரகம் பூண்டு எதுவுமே தனியா அரைத்து ரசம் வைக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. டக்குனு 5 நிமிஷத்துல இந்த ரசத்தை வைத்துவிடலாம். அதுவும் கமகம வாசத்தோடு சூப்பர் ரசம். .

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,