யார் சுட்டது

 மலேசியவில் நடந்த ஒரு கூட்டத்திற்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 'அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்' என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, எதையும் அலட்டிக் கொள்ளாமல் கூட்டத்தில் பேசினார் ராதா.

‘ எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்'. இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கைக்கூட மிகச் சாதாரணமாகக் கடந்து போனார் எம்.ஆர்.ராதா.
எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 53 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா
நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கிவிடவில்லை. என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைத் தூக்கினார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சாதாரண மக்களிடம் மேலோங்கியே இருக்கிறது. 1967-ம் ஆண்டு, ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தான் கொண்டு போயிருந்த துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே நிரப்பியிருந்தார் ராதா. எம்.ஜி.ஆரை நோக்கி துப்பாக்கியின் விசை அழுத்தப்பட, எம்.ஜி.ஆரின் இடதுகாதை ஒட்டி துப்பாக்கி ரவை துளைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப் பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார் எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தனர்.
" என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்துவந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?" என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர். ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரசேகரன். 'அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை' என விளக்கினார்.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்து வைத்தது. எம்.ஆர்.ராதாவின் வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார். ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்துவரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. தொழிலாளி திரைப்பட சூட்டிங்கின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டும். ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர். இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா, ‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்டிருக்கிறார். இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார். இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா. இதுதவிர, காமராஜரைக் கொல்ல சதி செய்யப்படுவதாகவும் ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. வழக்கு விசாரணையில், எம்.ஆர்.ராதாவை வளரவிடாமல் சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார் என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.
'எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்' என ராதா தரப்பில் சொல்லப்பட, அதை முறியடித்தது தடயவியல் துறை. கே.சி.பி. கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியது என நிரூபித்தனர். இந்த சம்பவம் நடந்தபோது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. தயாரிப்பாளர் வாசு மட்டும்தான். அவர் தன்னுடைய சாட்சியத்தில், 'எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா' என வாக்குமூலம் கொடுத்தார். 'எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்' என ராதா தரப்பில் வாதம் செய்தாலும், முடிவில் சிறைத்தண்டனைக்கு ஆளானார் ராதா.
நீதிமன்றத்தில் வாதம் நடந்தபோது பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன. எம்.ஆர்.ராதா லைசென்ஸ்
இல்லாத துப்பாக்கியால் சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கடுப்பான ராதா, ' யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?' எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.
துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார். 'அரசியல் முன்விரோதம் காரணமாக ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத்தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது' எனக் கூறி, ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண்டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.
தண்டனைக் காலத்தில் அவரது சிறைக் கொட்டடியில் வெளிநாட்டு கைதி ஒருவரும் தங்கியிருந்தார். அந்தக் கைதிக்கு ராதா சமைத்துப் போட்ட கேசரியும், சாம்பாரும் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ஒருநாள் பேச்சுவாக்கில் ஒன்றைக் கேட்டார் ராதா. " ஏன்யா வெள்ளைக்காரா...உங்கள் ஊரில் எப்படி... 30 வருஷம் வக்கீலாக இருக்கறவர்தான் ஜட்ஜா வருவாரா?" எனக் கேட்க, அந்த வெளிநாட்டுக் கைதியும், " ஆமாம். எங்கள் ஊரிலும் அதே வழக்கம்தான்" எனச் சொல்ல, பலமாக சிரித்த ராதா, " அதெப்படிய்யா...முப்பது வருஷம் பொய்யை மட்டுமே வாழ்க்கையாக வச்சுட்டு வாதாடி சம்பாதிக்கற ஒருத்தர் ஜட்ஜா வந்து உட்கார்ந்ததும், மை லார்டுன்னு சொல்றோமே. இந்த அநியாயம் வேறெங்காவது நடக்குமா?" எனக் கேட்க, வெளிநாட்டுக் கைதி யோசனையில் ஆழ்ந்தாராம். அதுதான் எம்.ஆர்.ராதா.
துப்பாக்கிச் சூடு வழக்கில் இருந்து வெளியே வந்துவிட்டாலும், 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின்போது, மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் ராதா. 'திராவிடர் கழகத்துடன் தொடர்பில்லை' என எழுதித் தந்தால் விடுதலை செய்வதாகக் கூறியும், நிபந்தனையை ஏற்க மறுத்து பதினொரு மாதங்கள் சிறையில் இருந்தார் எம்.ஆர்.ராதா. கடைசிவரை, எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளாமல் இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது பெரியாரின் இறப்பின்போதுதான். அப்போதுகூட,' உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வேண்டாம்' என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.
அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரசு மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
-ஆ.விஜயானந்த்
நன்றி: விகடன்
May be an image of 2 people and people standing




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,