புலமையின் தலைமையே போய் வா! *

 புலமையின் தலைமையே

போய் வா!

                                                                                       (புலவர் புலமைப்பித்தன் அஞ்சலி)








*

புலவரே 

போய் வாருங்கள்.

பொன்மனச் செம்மலின் தோழரே

போய் வாருங்கள்.


கனத்த மனத்தோடு விடைதருகிறோம்

போய் வாருங்கள்.


கண்ணீர்ச் சரத்தோடு 

விடைதருகிறோம்

போய் வாருங்கள்.

*

நீங்கள் எழுதிய பாடல்கள்

செல்லுலாய்டில் செதுக்கிய கல்வெட்டு.


சொற்களுக்கு வண்ணம் தீட்டிய தூரிகை 

உங்கள் எழுதுகோல்.

*

எழுத்துக்களை

எண்ணி எண்ணி வைக்கும் போதே 

கற்பனையையும் 

எண்ணி எண்ணிச் செதுக்கும்

கலையில் உங்களுக்கு நிகர் நீங்களே.


இசையில் உருகியோர் உலகினில் உண்டு 

இசையே உருகியது உங்கள் கற்பனைகளில் அல்லவா?

*

பள்ளி கொண்டுவிட்ட பாவலரே


உங்களுக்குப்

பாடல்களைப் பள்ளிக்கூடமாக்கவும் தெரியும்

பள்ளியறை ஆக்கவும் தெரியும் .

*

நீங்கள் விடைபெற்ற

இந்த இரவில் 

எம் அறைகளில்  

இசை மழை பொழிகிறது

எங்கள் ஜீவனைக் கண்ணீர் நனைக்கிறது.

*

புலமையின் தலைமையே

தலைமை போற்றிய புலமையே


வயோதிகம் வழியனுப்பலாம் உங்களை


ஆனால் உங்கள் பாடல்களில் விளையாடும் வாலிபத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள்.

*

மேலவைப் பதவி வகுத்தவரே


தமிழின் சந்தங்கள் எல்லாம்  

அப்பதவியில்  உங்களை

எப்போதும் வைத்திருக்கும்.


அது நிரந்தரமானது

அந்த அவை என்றைக்கும்

காலாவதி ஆகாது.


காற்றிருக்கும் வரைக்கும்

உங்கள் பாட்டிருக்கும்

அது வளிமண்டலத்தை விட்டுப் போகாது.

*

பிருந்தா சாரதி


*


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,