சிவாஜியின் டிரஸ்




 சிவாஜியின் டிரஸ், மேக்கப் வைத்தே படத்தின் பெயர்களை எளிதாக சொல்லக்கூடிய அளவுக்கு மக்களின் மனதில் கரைந்து போயிருந்தார்.. அந்த படத்தின் கேரக்டரை பார்த்த உடனேயே அது என்ன படம் என்று சொல்லிவிடலாம்.. ராணுவ வீரனா, அது பதிபக்தி, தொழிலதிபரா அது 'பாசமலர்', இஸ்லாமிய இளைஞனா, அது 'பாவமன்னிப்பு', பணச்செருக்கு தந்தையா அது 'பார் மகளே பார்', பாதிரியார் உடையா, அது 'வெள்ளைரோஜா'.. இப்படித்தான் சிவாஜி, தன்னுடைய ரசிகர்களின் மனதில் பிரிக்க முடியாத அளவிற்கு படிந்து போனார்.

லிஸ்ட்
கேரக்டர்கள் மட்டுமில்லை.. அவரது நடையை மட்டுமே பிரித்து வகை வகையாக பேசலாம்.. "பார்த்தாலே பசி தீரும்" படம் முழுக்க தாங்கி தாங்கி நடக்கும் தன்னம்பிக்கை நடை, "திருவிளையாடல்" படத்தில் சிவபெருமானின் மிடுக்கு நடை, "போனால் போகட்டும் போடா" என்று அலட்சிய நடை, "பாகப்பிரிவினை"யில் தட்டு தடுமாறும் தளர்ந்த நடை, "ஆண்டவன் கட்டளை"யில் நம்பிக்கை நடை, "முதல் மரியாதை" படத்தில் கேஷூவல் நடை, "தேவர் மகன்" படத்தில் கம்பீர நடை என லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம்..
சிவாஜி
அட இவ்ளோ எதுக்கு? சிகரெட் பிடிக்கும்போதுகூட டிசைன் டிசைனா புகையை விட்டது நம்ம சிவாஜியாகத்தான் இருக்கும்.. அலட்சியத்துடன் சிகரெட் பிடிப்பது, சோகத்துடன் குழப்பத்துடன் சிகரெட் பிடிப்பது, ஆணவத்துடன் சிகரெட் பிடிப்பது, ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது, என ரக ரகமாக பிடித்து, சிகரெட் நெடியில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.
வாய்ப்பு
கட்டபொம்மனையோ, கர்ணனையோ, சிவபெருமானையோ நாம் யாரும் நேரில் பார்த்ததில்லை. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்றுகூட நமக்கு தெரியாது? அதற்கு எந்தவித ஆதாரமும் இதுவரை இல்லை. அதற்கு இனியும் ஒருகாலும் வாய்ப்பும் இல்லை. ஆனால் நமக்கு சிவாஜி கணேசனை தெரியும். அவர்கள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.
ஹீரோ
சிவாஜியிடம் பொதிந்திருந்த இன்னொரு மகத்தான விஷயம், ஒருநாள்கூட தன்னுடைய இமேஜ் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை.. ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கிட வேண்டும், எதையாவது சர்க்கஸ், சாகசங்கள் செய்து ஒரு "ஆல் டைம்" ஹீரோவாகவே உலா வரவேண்டும், கெத்து காட்ட வேண்டும், இப்படி யோசித்ததே கிடையாது.. அதேபோல, இன்னின்ன கேரக்டர்கள்தான் வேண்டும் என்று அடம்பிடித்ததும் கிடையாது.
தலைமுடி
நல்லவனோ, கெட்டவனோ, கூனோ, குருடோ, நொண்டியோ, முடமோ, போலீஸோ, திருடனோ, எதுவானாலும் என்ன தயங்காமல் ஏற்று நிறைவாக நடித்து தந்த அசாத்திய திறமைசாலி.. ஒரு கலைஞன் எந்த கேரக்டர் தந்தாலும் அதனை கொஞ்சமும் தயங்காமல் ஏற்று செய்வதே நிஜமான கலைஞன் என்பதில் சிவாஜி கணேசன் பிடிவாதமாகவும் உறுதியாகவும் இருந்தார். அதனால்தான் அவரது தலைமுடி முதல் கால் விரல்நுனி வரை அனைத்துமே நமக்கு கதை சொல்லியது.
கண்ணியம்
இவர் வாய் திறந்து பேச வேண்டியதே இல்லை.. கணைக்கும் சிம்மக்குரலும், துடிக்கும் உதடுகளும், உயர்நோக்கும் புருவங்களும், விம்மும் கன்னங்களும் என ஒவ்வொரு அவயமும் நடிப்பை கொண்டு வந்து நம் கைகளில் அள்ளி தந்துவிட்டு, "இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?" என கேட்டுவிட்டு போகும். இது அவரது இறுதிகால கட்ட படங்களிலும் பளிச்சிட்டது. "முதல் மரியாதை"யில் ஆபாசமோ, விரசமோ இல்லாமல் கண்ணியத்துடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நம் சிவாஜிகணேசனை தவிர யாரால் முடியும்?
அற்புத கலைஞன்
உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புத கலைஞன்தான் சிவாஜிகணேசன்... எது நடிப்பு, எது இயல்பு என்று கடைசி வரை நமக்கு தெரியவே இல்லை.. எல்லாவித உணர்ச்சி குவியல்களை வெள்ளித்திரையில் கொட்டி வர்ண ஜாலம் செய்தவர் சிவாஜி கணேசன்.. இந்த பூமி பந்தில், மனித குலத்தின் கடைசி ரசிகன் உயிர்வாழும்வரை, சிவாஜி கணேசன் என்ற சகாப்தத்துக்கு மரணமுமில்லை.. காலமுமில்லை...!
நன்றி: ஒன்இந்தியா தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,