சென்னை கோயம்பேடு புதிய மேம்பாலம்.. நவ.1 முதல் திறப்பு

 

சென்னை கோயம்பேடு புதிய மேம்பாலம்.. நவ.1 முதல் திறப்பு.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி





சென்னை கோயம்பேடு புதிய மேம்பாலம் வரும் நவம்பர் 1-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இந்த பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தலைநகர் சென்னையில் எத்தனை வசதிகள் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இது போன்ற நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. என்னதான் போக்குவரத்து போலீஸாரும் பொதுமக்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி விட்டாலும் நெரிசலால் தாமதம் ஏற்படுகிறது
வாகன ஓட்டிகளையும் ஆம்புலன்ஸ் வாகனங்களையும் கருத்தில் கொண்டு சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பஸ் நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.

ஒரு கிலோ மீட்டர் தூரம் இந்த மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இந்த பணிக்காக ரூ.93.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி 2018 ஜூன் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பணியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்ட பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இந்த மேம்பாலம் 4 வழிப் பாதையாக கட்டப்பட்டுள்ளது. ஜெய்நகர் பூங்காவில் தொடங்கி தே.மு.தி.க. அலுவலகம் முன்பு வரை கட்டப்பட்டுள்ளது. புதிய மேம்பால பணிகள் முழுமை அடைந்ததை அடுத்து அதை திறப்பதற்கான ஏற்பாடுகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.

இன்று திறப்பதாக இருந்த நிலையில் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டு நவம்பர் 1-ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை காலையில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் போக்குவரத்து அதிகரித்துள்ளது. பண்டிகைக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
பண்டிகைக்காக வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் நெரிசல் இல்லாமல் உரிய நேரத்தில் செல்ல வசதியாக புதிய மேம்பாலம் தற்போது திறக்கப்படுகிறது. புதிய மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் 1.5 லட்சம் வாகனங்கள் அந்த சாலையை கடக்கின்றன. இந்த பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் 2 சிக்னல் சந்திப்புகளில் வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. காளியம்மன் கோவில் தெரு சந்திப்பு வழியாக மார்க்கெட், ஆம்னி பஸ் நிலையம் செல்லக் கூடிய வாகனங்கள் மற்றும் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு செல்லக் கூடிய சந்திப்புகளில் நெரிசல் இல்லாமல் செல்ல முடியும்.
கிண்டி, வடபழனியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக திருமங்கலம், செங்குன்றம் மார்க்கத்திற்கு எளிதாக செல்ல முடியும். இதேபோல அந்த பகுதியில் இருந்து வரக் கூடிய வாகனங்கள் கிண்டி மார்க்கத்திற்கு எளிதாக கடந்து செல்ல முடியும். 60 முதல் 65 சதவீதம் வாகனங்கள் நேரடியாக மேம்பாலம் வழியாக இனிவரும் காலங்களில் கடக்க முடியும்.

கோயம்பேடு எனவே புதிய மேம்பாலம் திறப்பின் மூலம் கோயம்பேடு 100 அடி சாலையில் இனி நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது போல் இன்னம் பிற மேம்பாலங்களையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது போன்ற மேம்பாலங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதால் மக்களுக்கு நேரம் மிச்சமாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,