கவிஞர் பிறைசூடன் கண்ணீரோடு வழியனுப்புவோம்.

 








சண்டைக்கோழி 2' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வந்திருந்த கவிஞர் பிறைசூடன் அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்த தருணங்கள் இனிமையானவை.


அப்போது நான் ரசித்த அவருடைய திரைப்படப் பாடல்கள் பற்றிப் பகிர்ந்து கொண்டு பாராட்டுவேன். பெரிதாக அதை பொருட்படுத்தாமல் மிகச் சாதாரணமாகக் கடந்து செல்வார். மெட்டுக்கு எழுதுவதில் அநாயச லாவகம் கொண்ட கவிஞர்.


'பையா' படத்தின் ஒளிப்பதிவாளர் மதியின் சொந்த அண்ணன் பிறைசூடன் அவர்கள். ஆகவே அவர் மீது ஒரு சகோதர பாசமும் எனக்கும் நண்பர் இயக்குனர் லிங்குசாமிக்கும் இருந்தது.


'நக்கீரன்'குடும்பத்தின் 'இனிய உதயம்' இதழில் கவிதை இளவரசர் எனும் இளைஞர்களுக்கான கவிதை போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் ஒரு நடுவராக பிறைசூடன் அவர்களோடு கலந்து கொண்டேன். 


'சண்டைக்கோழி 2' படப்பிடிப்பின் இடைவேளையில் என்னுடைய 'மீன்கள் உறங்கும் குளம்' எனும் ஹைக்கூ தொகுதி வெளியிடப்பட்டது. அதில் பிறைசூடன் அவர்கள் மகிழ்வோடு கலந்து கொண்டு மனந்திறந்து பாராட்டினார்.


'மூணு வரில இவ்வளோ விஷயம் எழுத முடியுதே' என ஹைகூ வடிவத்தை வியந்தார்.

 

அவரோடு உரையாடும்போது அவருக்கிருந்த பழந் தமிழிலக்கியங்கள் மீதான அவரது ஆளுமை  மிகுந்த வியப்பை அளித்தது. பக்தி இலக்கியங்களில் ஆழமான அறிவினைக் கொண்டு இருந்தார் . சிறந்த சொற்பொழிவாளர். சோதிடக் கலையில் தேர்ந்தவரும் கூட. எதேதோ நினைவுகள் அலை மோதுகின்றன.


'நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடி போதும்' என்ற அவரது ஞானப் பாடல் இன்று  அதிகமான  சோகத்தை வழிய விடுகிறது.


ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி நீரைப்போல அனைவரோடும் கலந்து மிக எளிமையாக வாழ்ந்த அந்த கவிஞரை கண்ணீரோடு வழியனுப்புவோம்.

*

 - பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,