மணியே மணியின் ஒலியே

 ஆதிபராசக்தி படத்தில் வரும் மணியே மணியின் ஒலியே பாடல் கேட்க கேட்க காதில் இனிமை பாயும். 'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் அதாவது எஸ்.வி.சுப்பையா நெருப்புத்தனல் மீது கட்டப்பட்ட ஊஞ்சலின் மீது நின்று பாடுவதாக வரும் பாடல். இந்த பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். சொல்லடி அபிராமி என்று உரிமையோடு எழுதியிருப்பார். இந்த பாடல் எழுதும் போது கவியரசருக்கு நேர்ந்த அனுபவங்களை ஒருவர் முகநூலில் எழுதியுள்ளார். தன்னை மறந்து சொக்கிப் போனார் கண்ணதாசன். அந்த பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்..! இது நடந்தது 'ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது. இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் முதலில் அபிராமி அந்தாதி என்ற அந்தப் பாடல்களில் அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம் அகலாதஅருள்வாமி சுகபாணி அபிராமியே என்ற அந்த வரிகளை கொண்டு அந்த பாடல் எழுதுவதாக அமைத்தார் ஆனால் அவருக்கு மனம் திருப்திப் படவில்லை கண்ணதாசனிடம் சொன்னார். இன்னும் உணர்ச்சி பொங்க வேண்டும் அந்த ஆதிபராசக்தி ஓடி வர வேண்டும் அது போல பாடலை சொல்லுங்கள் என்றார். இது நடந்தது 'ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது. ' கண்ணதாசனிடம் காட்சியை விளக்கினார் இயக்குநர். கண்ணதாசன் தயாரானார். "முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம். எழுதிக் கொள்ளுங்கள்." கண்ணதாசன் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார். "மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே." இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கண்ணதாசன் "போதும் அபிராமி அந்தாதி" என்றார். கண்களை மூடிக் கொண்டு மௌனமானார் கண்ணதாசன். சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை , அவரது சொந்த வார்த்தைகள்: "சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?" வார்த்தைகள் வந்து விழ விழ , அதைப் பிடித்து எழுத்தில் வடித்துக் கொண்டார் உதவியாளர். கிட்டத்தட்ட முக்கால்வாசி பாடல் முடிந்து விட்ட வேளை அது. பாடலின் இறுதி வரிகளாக , என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கண்ணதாசன். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை. மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கண்ணதாசன். அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் வந்து , பந்து விளையாடுகிறாள். அவள் துள்ளிக் குதித்து பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கண்ணதாசன். ஆம். திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல் , கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது. அந்த குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச் சொல்லும் வரிகள். பந்து துள்ளுவதைப் போல, பாடல் வரிகளும் கூட துள்ளும். இதோ , அந்தப் பகுதி : வசந்தவல்லி பந்தடித்தல் செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம் என்றாட - இடை சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து குழைந்தாட - மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே. இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள். இந்த பந்து விளையாட்டு பாடலை , பற்றிப் பிடித்துக் கொண்டார் கண்ணதாசன். முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு , கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றி முடித்தார். "மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ." இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல். நிச்சயமாக டி.எம்.எஸ்சைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை கொடுத்து பாடி இருக்க முடியாது. எஸ்.வி.சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. கண்ணதாசனை தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளை கோர்த்து , இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது. கே.வி மஹாதேவன் இசையில் வந்த இந்த பாடலை மறக்கவே முடியாது .

நன்றி: பிலிம்பீட் தமிழ்
May be an image of 1 person

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,