கார்காலம்/உமாசங்கர் கவிதைகள்
கார்காலம்
செவ்வான சிவப்பெடுத்து
செங்காந்தள் பூத்திருக்க,
பாறை மீது புதுத்தண்ணீர்
கும்மாளம் போட்டிருக்க
ஜடைபின்னி சதிராடும்
ஆலமர விழுதுக்கு
மேகம் வந்து பூ வைக்க
மயிலாடும் நாட்டியத்தை
மான் கூட்டம் மகிழ்ந்து நோக்க
மழைத்தண்ணீர் குடித்த தவளை
தொண்டை கட்டி கமறிக்கத்த
கதிரவனை காணாமல்
கொண்டைசேவல் குழம்பி நிற்க
கார்கால கருங்குழலி
கதிர்மறைத்து நகைக்கின்றாள்!
--உமாசங்கர்
Comments