நல்ல மனிதர் ஸ்ரீகாந்த்.
வெண்ணிற ஆடை படம்தான் ஸ்ரீகாந்திற்கு முதல் படம். ஜெயலலிதாவிற்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். அந்தப் படம் வெளியானபோது இவரா ஹீரோ என்று திரையரங்கில் ரசிகர்கள் கூச்சலிட ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் கூச்சல் தாங்காமல் அந்த தியேட்டர் ஓனர் கையில் கம்பெடுத்துக்கொண்டு திரைக்கு முன்னால் வந்து நின்றுவிட்டார். படம் பிடிக்கலான எந்திருச்சு போய்டு... ஏதாவது சத்தம் போட்டு திரையில் என்னத்தையாவது எறிஞ்சிங்கனா கொன்னேபுடுவேன் என்றார். அவர், ஆள் பார்க்கவே பலமான ஆள் மாதிரி இருப்பார். அவர் வந்து அரட்டியதும் அத்தனை பேரும் அமைதியாகிவிட்டனர். உண்மையிலேயே அப்போது இருந்த ஸ்ரீகாந்தை யாரும் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இப்படி இருந்த ஸ்ரீகாந்த், சில நேரங்கள் சில மனிதர்கள் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
நான் அந்த நேரத்தில் ஸ்ரீகாந்தை வில்லனாக என் படத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். அதற்காக அவர் வீட்டிற்கு நான் நேரில் சென்றேன். என்னை அன்போடு வரவேற்ற அவர், சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பார்த்தீர்களா என்றார். நான் அவருடைய நடிப்பை வெகுவாக பாராட்டிப் பேசினேன். பின், என்ன விஷயமாக வந்திருக்கீங்க என்றார். நான் ரஜினியை ஹீரோவாக வைத்து படமெடுக்கிறேன். அந்தப் படத்தில் நீங்கள் வில்லனாக நடித்தால் வியாபார ரீதியாக எனக்கு உதவிகரமாக இருக்கும் என்றேன். அதுக்கென்ன கலைஞானம்... தொழில்தான... எந்த வேஷம் கொடுத்தாலும் நடிக்கிறேன்... நீ கதைகூட சொல்ல வேண்டாம்... தேதி மட்டும் கொடு என்றார். சம்பளம்கூட உன்னால என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடு எனக் கூறிவிட்டார். அந்த அளவிற்கு நல்ல மனிதர் ஸ்ரீகாந்த்.
- கலைஞானம்
நன்றி: நக்கீரன்
Comments