அறிவுமதி அவர்களுக்கு பிருந்தா சாரதி அவர்களின் பிறந்தநாள் மடல்
தாய்மை கொண்ட ஆண்மை
அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
*
பிருந்தா சாரதி
*
அண்ணன் #அறிவுமதி ....
எத்தனைத் தம்பிகள் இவருக்கு?
ஒவ்வொருவரோடும் அதே நேசம் .
இன்று புதிதாய் ஒரே ஒரு வரி எழுதி வரும் இளம் கவிஞனோடும் வாஞ்சையோடு பேசி அவனை வளர்த்துவிடுவதில் அக்கறையோடு நேரத்தைச் செலவிடும் அன்பு. அகமும் முகமும் கனிந்து பாசத்தைப் பரிமாறும் தாய்மை.
தமிழ் மொழியின் மீது ஆழமான காதல் கொண்டவர் அண்ணன்.
அது அவர் தாய்மொழி மீது அவர் கொண்ட பற்று என்பதைத் தாண்டி
ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழி மீது அன்பும் பற்றும் கொண்டிருக்க வேண்டும் என்று விரியும் உலகலாவிய உயிர்த்துடிப்பு.
கவிக்கோவின் செல்லப்பிள்ளை. அய்யாவின் நேரடிப் பராமரிப்பில் வளர்ந்து இன்று வான் நோக்கி வளர்ந்து நிற்கும் வாகை மரம். நூற்றுக்கணக்கான குயில்கள் வந்து குடியிருக்கவே தான் கிளைகள் விரித்ததாய் பூரிக்கும் தாய்மரம்.
ஆம்... ' தை ' யின் தாய் அண்ணன் அறிவுமதி. ஆண்டுக்கொரு இலக்கியப் புதையல் ஈனும் 'தை' இதழின் விதை அண்ணனே. முன்னோடிகளைப் போற்றி வணங்குவதில் மட்டுமல்ல ... இன்று பிறக்கும் இளம் மழலைகளைக் கொண்டாடுவதிலும் அவர் அக்கறை கொள்வதை அதன் பக்கங்கள் சொல்லும். ஆழம், உயரம் எனும் இரு திசை நோக்கி வளர்ந்து செல்லும்
தாவர இயல்பு இயல்பாகவே அமையப் பெற்றவர் என்பதால் 'தை' - யிற்கும் அதே இயல்பு.
அண்ணனின் 'புல்லின் நுனியில் பனித்துளி' தமிழில் தடம் பதித்த முன்னோடி ஹைக்கூ நூல். ஏராளமான தமிழ் ஹைகூ கவிஞர்களை அந்நூல் உருவாக்கியது. உருவாக்கி வருகிறது. உருவாக்கும்.
'பருத்திக் காட்டில்
காவல் பொம்மைக்குக்
கந்தல் சட்டை.'
'யாருக்கு யார் சொந்தம் பனை மரத்தின் இடுப்பில்
ஆலமரம்.'
'உடைந்த வளையல்களைக் குளத்தில் எறிந்தேன் எத்தனை வளையல்கள்.'
இவற்றையெல்லாம் என் கல்லூரிக் காலத்தில் படித்த போது ஏற்பட்ட பரவசத்தை இப்போது விளக்க முடியாது. அது காதலித்த பெண்ணை முதல் முதலாக பார்த்த அனுபவத்தை இன்னொருவரிவரிடம் பகிர்ந்து கொள்வது போன்றது. அதைத் தனக்குள் எண்ணிப் பார்த்து இன்புறலாம். ஆனால் முழுமையாக எடுத்துரைக்க இயலாது.
ஹைகூ மட்டும் அல்ல... இன்னும்
பலவற்றுக்கு அண்ணன் முன்னோடி.
ஆண் பெண் நட்புக்கு ஒரு கவிதைத் தொகுதியே எழுதியிருக்கிறார். 'நட்புக்காலம்' என்ற அத்தொகுதிக்கு முன்னுதாரணம் ஏதுமில்லை.
அண்ணன் பதித்த முதல் சுவடு .
'நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காங்கள்
உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்.'
அந்த வகைமையில் இன்று பலரும் எழுதுகின்றனர்.
' ஆயுளின் அந்திவரை ' என்பது அண்ணன் எழுதிய காதல் படிக்கட்டு. தீராத மாயப்படிகள் அதன் படிகள்.
'மேல் இமையில் நீயிருக்கிறாய்
கீழ் இமையில் நான் இருக்கிறேன்'.
ஒரு பாடலுக்கான பல்லவி அல்லவா இவ்வரி. இது போல் எத்தனை?காதலின் ஆச்சர்யம் காட்டும் மாயக்கண்ணாடி ஒவ்வொன்றும்.
'மழைப் பேச்சு' , 'மழைத் தும்பிகள்' இரண்டும் சங்கக் கவிஞன் ஒருவன் புதுக்கவிதை எழுதியது போலிருக்கும்.
'பாடல் என்பது பாடப்படுபவரால் முடிக்கப்படுவதில்லை.'
'பயன்படத்தான் செய்கிறது தும்பி பிடித்த அனுபவம்.'
'பசித்துக் கொண்டுதான் இருக்கும்
பசித்து உண்'.
'மழை ஓய்ந்த பின் சாரலாய்
நினைவுகள் .'
படிமங்கள் ஒவ்வொன்றும் சர்க்கரைப் படிவங்கள்.
இடம்பெயர்ந்து வாழும்
ஈழத் தமிழர் துயர் குறித்து அண்ணன் வடித்த கண்ணீர் 'வலி '.
' வெள்ளைத் தீ ' என்ற அவரது சிறுகதைத் தொகுதி உரைநடையில் கவிதையை உருக்கி ஊற்றிய ஒரு புதுமை. கதையும் கவிதையும் கூடி முயங்கும் சர்ப்ப சிருங்காரம்.
'அன்பான ராட்சசிக்கு ' தொகுதிதான் நான் முதலில் படித்த அண்ணனின் நூல். மெழுகாய் உருகி வழியும் ஒரு பெண்ணின் அட்டைப்படம் இன்னும் நினைவிலிருக்கிறது.
'தங்கத் தமிழ்' மூலம் சங்கத் தமிழை ஆராதிப்பவர் . இலக்கிய நயம் பாராட்டும் ரசனை அனுபவம் கடந்து தமிழர் வாழ்வியல் உரைக்கும் பண்பாட்டு ஆவணம். சங்க இலக்கியம் என்றால் 'காதலும் வீரமும்' என்று தொடர்ந்து சொல்லப்பட்டதால் அவற்றை மட்டுமே அது கொண்டிருப்பதாக பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் அது தமிழரின் பண்பாட்டு ஆவணம்; அன்றாட வாழ்வியலை உணர்த்தும் அறநூல்; தமிழரின்
உணவு, உடை, மருத்துவம், விளையாட்டு, மெய்யியல், பல்லுயிர் ஓம்பும் பண்பாடு, இயற்கையோடு இயைந்திருத்தல், சூழலியல் போன்ற பலதரப்பட்ட வாழ்வியல் கூறுகளின் தொகுப்பு என்பதைச் சான்றுகளோடு நிறுவி அதை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாகப் பகிர்ந்த அரிய ஆய்வு நூல். ஒரு கவிஞனின் எழுகோல் தீண்டியதால் அதுவே படைப்பு இலக்கியமான புதுமையும் கூட.
அண்ணனின் வாழ்நாள் சாதனை இந்நூல் என்பது என் எண்ணம்.
எத்தனைக் கவிஞர்களுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார் அண்ணன் ? எல்லாமே இலக்கியப் புதையல். அவற்றைத் தொகுத்தால் தெரியும் அண்ணனின் இதயம் பெரிதா? அந்த ஆகாயம் பெரிதா என்று.
என் 'பறவையின் நிழல்' கவிதைத் தொகுதிக்கு அண்ணன் எழுதிய அணிந்துரை நான் பெற்ற முதல் விருது.
'இது நீளப் பழகிய என் நெடுநாள் உறவன் பிருந்தா சாரதியின் அடுக்கு ஓடை.
...
கரைத்துக் குடித்தவன் என்பதினும்
மூழ்கி மண் எடுத்தவன்
என்பதே மெய்.'
போன்ற வரிகளை எல்லாம் மீண்டும் மீண்டும் படித்து உள்ளூர மகிழ்வேன். காதல் கடிதத்தை எத்தனை படித்தாலும் அலுக்குமா என்ன ?
படைப்பு குழுமம் வெளியீடான என் 'இருளும் ஒளியும்' நூலை 2019 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அண்ணன்தான் வெளியிட்டார்.
இயக்குநர் என்.லிங்குசாமிக்கு அண்ணன் என்றால் உயிர். அண்ணனைப் படித்துதான் தான் ஹைகூ எழுதுவதாக மேடைக்கு மேடை சொல்வார்.
நீண்ட நாளாகப் பாடல் எழுதாதிருந்த அண்ணனை சண்டைக்கோழி _2 இல் ஒரு பாடல் எழதவைத்தார். திரைப்பாடலில் உங்கள் முத்திரைகள் தனித்துத் தெரியும் அழகியல் ஆராதனைகள். அவ்வப்போது பாடலும் எழுதுங்கள் என அண்ணனிடம் அன்பு வேண்டுகோள் வைத்தோம்.
தனக்கு வரும் பணமோ புகழோ எதனோடும் தாமரை இலைத் தண்ணீராய் பட்டும் படாமல் உறவாடுவார். வாழ்நாள் சாதனையாக வந்த பரிசுத்தொகையைக் கூட மேடையிலேயே ஈழத் தமிழ்க் குழந்தைகளின் கல்வி நிதிக்கு வழங்கி விட்டார் என்று அறிந்தபோது எனக்குள் அண்ணன் கோபுரமாய் உயர்ந்தார்.
அவரது மகளின் திருமணத்திற்கு நண்பர் இயக்குனர் லிங்குசாமியும் நானும் பாண்டிச்சேரி அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தோம் . அங்கே தெரிந்தது அண்ணன் சேர்த்து வைத்த சொத்து. எளிய தொழிலாளர் முதல் இலக்கிய, திரையுலக, அரசியல் ஆளுமைகள் வரை ஏராளமானோர் திரண்டு வந்துவிட்டார்கள். கட்சி மாநாடுகளுக்கு வருவது போல் சாரை சாரையாய் வந்துகொண்டே இருந்தார்கள். அதுதான் அண்ணனின் பலம்.
அண்மையில் 'பபாசி' வழங்கும் 'கலைஞர் பொற்கிழி' விருதினைப் பெற்றிருக்கிறார்.
எழுதிக்கொண்டே போகலாம் அண்ணனைப் பற்றி... அதன் பக்கங்கள் அவர் உருவாக்கிய கவிஞர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகிவிடும். அதனால் வார்த்தைகளை நிறுத்தி மனதின் அன்பையே வாழ்த்துகளாக விரிக்கிறேன்.
அன்புத் தம்பி,
பிருந்தா சாரதி
*
Comments