மார்க்கமொன்று வேண்டுமிங்கே!/உமாசங்கர் கவிதைகள்
மார்க்கமொன்று வேண்டுமிங்கே!
வாழுகின்ற தன்வீட்டில்
வாகனப்புகை கக்கி
வளிமண்டலம் கெடுக்கும்
விலங்கினம் கண்டீரோ?
காலூன்ற நிலமீந்த
கன்னி நிலமகளிவளின்
மார்மீதில் துளையிடும்
மாக்களினம் கண்டீரோ?
உனது எனதெனவே
உளப்பாகுபாடு கொள்ளும்
உயிரினம் ஏதேனும்
உலகினிலே உள்ளதுவோ?
உருவான கருவறையின்
உள்ளேயே ஓட்டையிட்டு
பெருங்குண்டு வெடிக்கின்ற
பேதைத்தனம் கேளீரோ?
இயற்கை சுழற்சி தன்னை
செயற்கையால் சீரழிக்கும்
மனித இனம் திருந்திடவே
மார்க்கமொன்று வேண்டுமிங்கே
Comments