அலைகள் பாடும் பெயர் வ.உ.சி

 அலைகள் பாடும்

பெயர் வ.உ.சி.

*



*

நிலம் மட்டும் அல்ல

நீரும் எமது உரிமை

எனக் கடலிலும் நீ

சுதந்திரக் கொடி பறக்கவிட்டாய்.


கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்

இன்னும் பட்டொளி வீசிப் பறக்கிறது.


நீதிமன்றத்தில் மட்டும் நீ வழக்காடி  வாழ்ந்திருந்தால்

கப்பல் கப்பலாய்ப்

பொருள் ஈட்டியிருக்கலாம்.


மக்கள் மன்றம் வந்து

உரிமைக் குரல் கொடுத்தால்

நீதிமன்றம் கொண்டு போய் உன்னை  நிறுத்தினார்கள்.


ஆம்...

வழக்கறிஞராக நீ போகவேண்டிய நீதிமன்றத்துக்குக்

குற்றவாளியாகக் கொண்டு போய் நிறுத்தினார்கள்.


கண்ணை மூடிக்கொண்டு

தண்டனையும் கொடுத்தாள்

அன்று கோலோச்சிய

ஆங்கில நீதி தேவதை.


உன் வாழ்க்கைக் கப்பல் அத்தோடு மூழ்கியது.


முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்

என்பதால்

கப்பலில் வந்த வெள்ளையனைக் கப்பலோட்டியே 

கப்பலேற்றலாம் என நீ நினைத்தாய்.


சட்டம் படித்து

நீதி உன் நெஞ்சில் இருந்ததால்

உன் முள் கூட தராசு முள்ளாகத்தான் இருந்தது.


வணிகம் செய்ய வந்து ஆட்சி செய்த

வெள்ளையன் வைத்திருந்ததோ

விஷம் தடவிய முள்.


சிறையில் அடைத்து உன் சிறகுகளைப் பறித்து எறிந்தது 

ஏகாதிபத்தியம்.


செக்கிழுத்து நீ 

சிறையிலேயே 

தேய்ந்து போனாய்.


விடுதலை அடைந்து வந்த உன் துடுப்புகளை

உடைத்துப் போட்டது

எமது அலட்சியம்.


அதனால்

உடலும் உள்ளமும் 

ஓய்ந்து போனாய்.


அடியோடு வீழ்ந்துபோனது

அரசோடு போட்டி போட்ட உன் 

அகண்ட பொருளாதாரம்.


அன்றாட வாழ்க்கையே

தள்ளாடும் நிலைக்குப் போனது

உன் வாழ்வாதாரம்.


பின் உயிர் வாழ்ந்த நாளெல்லாம் கொடும் வெயிலானது

கடன்காரர்கள் பட்டியலே

உன் உயிலானது.


ஆனாலும்- 

எப்போது கப்பலைப் பார்த்தாலும்

உன் ஞாபகம் தான்

எங்கள் நெஞ்சில் எழுகிறது.


ஏனெனில்

தேசத்தின் முதல் சுதந்திர கப்பல் உன்னுடையதல்லவா?


அதிகாரத்துக்கு அஞ்சாமல்

நெஞ்சு நிமிர்த்திய

வீரனே 

சட்டத்தால் போராடிய சூரனே


சதி காரத்தால் நீ வீழ்ந்தாலும்

இந்திய

விடுதலைச் சரித்திரத்தில்

ஒளிவீசும் அத்தியாயம்

உன் சரித்திரம்.


காலக் கடலில் 

கரைந்து போகும் 

எத்தனையோ

மனித வாழ்க்கையில் 

என்றென்றும்

கரையாமல் வாழும்

கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்.


இந்தியப் பெருங்கடல்

அலைகள் 

உன் பெயரை 

ஓயாமல் 

பாடிக்கொண்டே இருக்கும்.

*

நவம்பர் 18 வ.உ.சி. நினைவு நாள்


பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,