காதலிக்க நேரமில்லை, 'பார்ட் - 2 ?

 நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாண பரிசு போன்ற உள்ளத்தை உருக்கும் படமாக எடுத்த, ஸ்ரீதர், அடுத்து, ஒரு முக்கோண கதைக்கான, 'டிஸ்கஷ'னுக்கு அழைத்தார். அப்போது, 'ஒரு மாறுதலுக்கு, முழு நீள காமெடி படம் எடுப்போம்...' என்றார், கோபு.




'என்னை வச்சு காமெடி படமா... அதற்கு நான் சரிப்பட்டு வருவேனா... ஜனங்கள் ஏத்துக்குவாங்களா...' என்று, அதிர்ச்சியுடன் தயங்கினார், ஸ்ரீதர். பேசி, ஸ்ரீதரை சம்மதிக்க வைத்தார், கோபு.
ரவிச்சந்திரன் காதலியாக, முதலில், நிர்மலாவை ஒப்பந்தம் செய்து, ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டு விட்டது. திடீரென ஸ்ரீதருக்கு, தான், 'ட்ராக்' மாறுவதாக பயம் வந்து விட்டது.
படத்தை அப்படியே கைவிட்டு, வேறு ஒரு பட வேலையில் இறங்கி விட்டார். அது தொடர்பாக, ஸ்ரீதர் சந்திக்க வந்த போது, முகத்தை, 'உர்'ரென்று வைத்துக் கொண்டார், கோபு.
ஸ்ரீதருக்கு விஷயம் புரிந்து போனது, 'இப்ப என்னாங்கிறே... காதலிக்க நேரமில்லை படத்தை எடுத்துட்டு தான், அடுத்த வேலைங்கிற, அப்படித்தானே... சரி, உன் இஷ்டம்...' என்றார்.
காமெடி தான் கதையின், 'ஹீரோ' என்றானதும், கோபுவிடம் இருந்து நகைச்சுவை வற்றாமல் ஊற்றெடுத்தது. காட்சிகளை, 'டெவலப்' செய்து கொண்டே போனார். சினிமா பைத்தியம் பிடித்த மகன் வேடத்தை விரிவுபடுத்தினார். நாகேஷும், தன் திறமையை வெளிப்படுத்தினார்.
ரவிச்சந்திரனை காப்பாற்ற, அப்பா வேடத்தில், பாலையாவின் வீட்டிற்கு வந்திருப்பார், முத்துராமன். அப்போது, எதிர்பாராத விதமாக, முத்துராமனின் அப்பாவும் அந்த வீட்டிற்கு வந்து விடுவார் என்று, கோபு வைத்த, 'ட்விஸ்ட்' ரொம்பவும் பிடித்துப் போனது, ஸ்ரீதருக்கு.
கோபுவை கட்டிப்பிடித்துக் கொண்டார். பட, 'டைட்டிலில்' கதை, ஸ்ரீதர் - கோபு என்று, தனக்கு சமமாக, கோபுவின் பெயரை இடம் பெறச் செய்தார்.
'என்னப்பா... இது, சட்டைப்பா...' என்பது போல, படத்தில் இடம் பெற்ற, கோபுவின் வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் விழுந்து விழுந்து சிரித்தனர், ரசிகர்கள்.
கடந்த, 1964ல் வெளிவந்த இந்த படம் தான், தமிழில் வெளியான முதல் முழு நீள வண்ணப்படம். ரவிச்சந்திரன், 'ஏர்ஹோஸ்டஸ்' ஆக இருந்த, காஞ்சனா உள்ளிட்ட நிறைய பேர், அந்த படத்தில் புதுமுகங்களாக இடம் பெற்றிருந்தனர்.
'என்ன பார்வை... மாடி மேலே... உங்கள் பொன்னான கைகள்... அனுபவம் புதுமை... நாளாம் நாளாம்... மலரென்ற முகமொன்று... காதலிக்க நேரமில்லை...நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா...' என்பது போன்ற, எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்களை கொண்ட படம்.
இதெல்லாம் பரவாயில்லை... அதுவரை கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த, சச்சுவை, நகைச்சுவை நடிகையாக்கியதும், இந்த படம் தான். இதற்காக, கோபு, சச்சுவின் வீட்டிற்கு போன போது, 'ஒன்லி ஹீரோயின் ரோல் தான் நடிப்பார்...' என்று சொல்லி, அவரது பாட்டி மறுத்து விட்டார்.
பிறகு, 'படத்தில், மூன்றாவது, 'ஹீரோ' நாகேஷ். அவருக்கு ஜோடி என்றால், 'ஹீரோயின்' தானே...' என்று எதை எதையோ சொல்லி, ஒப்பந்தம் செய்து விட்டார்.
'என்னுடைய, 'ட்ராக்'கையே மாற்றியவர், கோபு தான்...' என்று, இப்போதும், சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார், சச்சு.
கவியரசு கண்ணதாசன்-, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், 'காம்பினேஷனில்' பாடல்கள் எல்லாம், 'ஹிட்!'
வெளியூர் போய் திரும்பிய விஸ்வநாதனிடம், 'நீ பாட்டுக்கு வெளியூர் போயிட்ட... எனக்கு யாரு வேலை கொடுப்பா விஸ்வநாதா... இப்ப வேலை கொடு...' என்று, செல்ல கோபத்துடன் கேட்டார், கண்ணதாசன்.
இதை கவனித்த ஸ்ரீதர், இதையே வரியாக போட்டு, பாட்டு எழுத சொன்னார். அது தான், 'விஸ்வநாதன் வேலை வேணும்...' என்ற பாடல். அந்த பாடல் வரிக்காகவே, பாலையாவின் பெயரையும் விஸ்வநாதன் என்று மாற்றினார்.
'இதுவரை, தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்தது இல்லை; இனி வரப்போவதும் இல்லை...' என்று சொல்லும் அளவிற்கு, 'சூப்பர் டூப்பர் ஹிட்'டானது. பியார் கியா ஜா என்ற பெயரில், ஹிந்தியிலும் எடுக்கப்பட்டது. இதற்காக, ஹிந்தியில் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் போடப்பட்டது.
படத்தில், பாலையாவிற்கு, நாகேஷ், மர்ம கதை சொல்லும் காட்சி தான், படத்தின், 'ஹைலைட்!'
'அசோகர் உங்க மகராமே...' என்று, மகன் என்ற வார்த்தையைக் கூட மரியாதையாக கூறும், பாலையாவின் பேச்சு, வசன உச்சரிப்பை கூட செய்து விடலாம். ஆனால், நாகேஷிடம் கதை கேட்கும் போது, மிரண்டு போய், நொடிக்கு நொடி, தன் முக பாவத்தை மாற்றும் வித்தையை பாராட்ட வேண்டும்.
அந்த காட்சிக்கு, பாலையா எவ்வளவு உயிர் கொடுத்து இருப்பார். இப்படி ஒரு காட்சி, கோபுவின் சிந்தனையில் எப்படி வந்தது என்பது தெரிந்தால், மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்?
காதலிக்க நேரமில்லை
படத்திற்கு ரஜினியின், 'கமென்ட்!'
பழைய படங்களை அதே தலைப்புடன் இரண்டாம் பாகமாக எடுக்கும், 'டிரண்ட்' தற்போது கோலிவுட்டில் நிலவி வருகிறது.
காதலிக்க நேரமில்லை படத்தை எடுக்கலாம் என்று, ஆளாளுக்கு முயற்சி எடுத்தனர். இந்த ஆர்வத்தை பார்த்த ரஜினி, 'எல்லா காலகட்டத்திலும் யாராவது காதலிக்க நேரமில்லை படத்தை பற்றி பேசிக்கிட்டே இருக்காங்க. நான் அந்தப் படத்தைப் பார்த்தாகணும்...' என்று, கோபுவிடம் பேசி, சி.டி., வாங்கி, படத்தை முழுமையாகப் பார்த்தார்.
பின்னர், 'படத்தில் நிஜமான, 'ஹீரோ' பாலையா தான். அவர் மாதிரி நடிக்க, இன்னைக்கு ஆள் கிடையாது. அதனால, காதலிக்க நேரமில்லை, 'பார்ட் - 2'க்கு வாய்ப்பே இல்லை...' என்று, சொல்லி விட்டார்.
நன்றி: தினமலர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,