ராஜானா ராஜா

தனது இசை வாழ்வு அனுபவங்கள் குறித்து, இளையராஜா கூறியதாவது:-



"சென்னை கமலா தியேட்டரில் `கிழக்கே போகும் ரெயில்' படத்தின் வெற்றி விழா. விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கலந்துகொண்டு எங்கள் எல்லாருக்கும் பரிசு வழங்கினார்.
அவர் பேசும்போது, படத்தில் இடம் பெற்ற ``மாஞ்சோலைக் கிளிதானோ'' என்ற பாடலை வாய்விட்டுப் பாடி, "அடடா! என்ன பாடல்! என்ன பாடல்!'' என்று புகழ்ந்து பேசினார். நடிகர் திலகத்திடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
சிவாஜி பேசும்போது, பாரதிராஜாவை வானளாவ உயர்த்திப்பேசினார். அப்போது, விழாவுக்கு வந்திருந்தவர்களில் ஒருவராக, பாரதிராஜாவின் அம்மாவும் அமர்ந்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
விழா முடிந்ததும், தனது தாயாரை சந்தித்த பாரதிராஜா, ``எப்படி இருந்தது?'' என்று கேட்க, அந்தத் தாயாரோ சர்வ சாதாரணமாக, ``அது என்னமோப்பா! அவங்க என்னென்னமோ பேசுறாங்க! ஆனா என் காதுல பாரதிராசா, பாரதிராசாங்கற உன் பேர் மட்டும்தான் கேட்டுதுப்பா'' என்று சொன்னார்.
உயர்ந்த தாயுள்ளத்தின் உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத்தான் என்னால் இதை உணர முடிந்தது.
இதற்கிடையில் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் ஆபீசிற்கு ஒருநாள் போய் வரலாம் என்று போனேன். அப்போது ராஜ்கண்ணுவுடன் சிலர் இருந்தனர். என்னைப் பார்த்ததும், ``படத்தின் பாடல்கள் சரியில்லை. பதினாறு வயதினிலே படப்பாடல்கள் மாதிரி அமைந்திருந்தால் படம் இன்னும் நன்றாகப் போகும்'' என்றார்கள்.
என் முகத்திற்கு எதிரேயே அவர்கள் இப்படிச் சொன்னதில், எனக்கு வருத்தமாகி விட்டது. எல்லா படப் பாட்டுக்களும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமா? என்ன இவர்களின் பேச்சு? ஒரு அடிப்படை கலை உணர்வு கூடவா இல்லாமல் இருப்பார்கள்? மனம் வருந்தினேன். அந்த மாதிரியான வருத்தங்கள், மனதில் வடுவாகத் தங்கி விட்டன.
நடிகர் திலகம் சிவாஜி நடிக்க "ரிஷிமூலம்'' என்ற படத்தை எஸ்.எஸ்.கருப்பசாமி தயாரித்தார். நான் இசை. மகேந்திரன் வசனம், எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷன்.
எஸ்.எஸ்.கருப்பசாமி அப்போது அருப்புக்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். மிகவும் கண்டிப்பானவர். கண்ணியமானவரும் கூட.
பாடல்கள் கம்போசிங்கிற்கு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கருப்பசாமி ஆகியோருடன் மகாபலிபுரம் போனேன். அங்குள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் தங்கினோம்.
மூன்று நாட்கள் தொடர்ந்து கம்போசிங் நடந்தது. "நேரமிது'' என்ற பாடலுக்கான சூழ்நிலை புதிது. சிவாஜி - கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும் இந்த டூயட் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? அவர்கள் பெட்ரூமில்! அதுவும் குழந்தை அருகில் படுத்திருக்கும்போது!
அதாவது தூங்கும் குழந்தை விழித்து விடாதபடி, மிக மெல்லியதாக அவர்களின் டூயட் அமைய வேண்டும். டியுன் அமைத்து, பாடிக்காட்டினேன். எல்லாருக்கும் பிடித்திருந்தது.

இந்த டியூனை நான் கம்போஸ் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.
அந்த மாலை நேரத்தில் பிரான்சில் இருந்து சுற்றுலா வந்திருந்த தம்பதியரில் பெண் மட்டும் எங்கள் அறையை கடந்து போயிருக்கிறார். பாடலைக் கேட்டவர் அப்படியே நின்று விட்டார். பிறகு ``நான் உள்ளே வரலாமா?'' என்று வெளியில் இருந்தவாறே சைகை மூலம் கேட்டார். "ப்ளீஸ் கம் இன்'' என்று டைரக்டர் சொல்ல, உள்ளே வந்தார்.
நாங்களெல்லாம் கீழே தரையில் விரிப்பை விரித்து அமர்ந்திருந்தோம். எங்களோடு அவரும் கீழே உட்கார்ந்தார். என் முகம் பார்த்தவர், ``நீங்கள் பாடிய பாடலை மறுபடியும் ஒருமுறை பாட முடியுமா?'' என்று கேட்டார்.
"ஓ'' என்றேன். மெதுவாக பாடவும் செய்தேன்.
அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து `பொலபொல' வென்று கண்ணீர் கொட்டியது.
பாடல் முடிந்ததும் எல்லாரும் அமைதியானோம்.

இப்போது அந்தப் பெண்மணி பேசினார். "இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்'' என்றார். அதோடு, "இந்த இசையை எனக்காக எழுதித்தர முடியுமா?'' என்று கேட்டவர், தனக்கு பியானோ வாசிக்கத் தெரியும் என்றும்
சொன்னார்.என்னிடம் மியூசிக் எழுதும் பேப்பர் இல்லை. எனவே என் லெட்டர்பேடில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அதில், கோடுகள் போட்டு அந்த இசையை பியோனோவில் வாசிப்பதற்கு தகுந்தாற்போல் எழுதிக் கொடுத்தேன்.
வாங்கிக் கொண்ட அந்தப் பெண் நன்றி ததும்ப, "இந்த இசையை வாங்குவதற்குத்தான் இந்த சுற்றுலா நடந்ததோ என்னவோ?'' என்று சொல்லியபடி விடை பெற்றுச் சென்றார்.

தகவல் : kandasamy.r

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,