கவிஞர் வேழவேந்தன்
கவிஞர் வேழவேந்தன் அவர்கள் மறைந்தார் எனும் செய்தி அறிந்து வருந்துகிறேன்.
கவிதை உறவில் வெளிவரும் கவிஞர் வேழவேந்தன் அவர்களின் மரபுக் கவிதைகளுக்கு நான் ரசிகன். இதை அவரிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எளிமையும் ஆர்ப்பாட்டம் இல்லாத இனிமையும் ஆற்றொழுக்கான நடையும் அவரது மரபுக் கவிதைகளை அழகு செய்தன. இடையறாது மரபில் எழுதிவந்தார்.
அண்ணாவின் 'திராவிட நாடு', கலைஞரின் 'முரசொலி', 'முத்தாரம்', பாவேந்தரின் 'குயில்',
சுரதாவின் 'காவியம்' போன்ற இதழ்களில் எழுதியவர் தானே 'தமிழ்த்தேன்' என்ற இதழையும் நடத்தி இருக்கிறார்.
அவர் ஒரு முன்னாள் அமைச்சர் என்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது ஜெனிவாவில் நடைபெற்ற உலகத் தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டவர் என்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருமுறை இருந்தவர் என்றும் வலைத்தளங்கள்
கூறுகின்றன.
ஆனால் அந்தப் பின்புலங்கள் எதையும் வெளிப்படுத்தாத இயல்பான மனிதராக அலைபேசியில் உரையாடினார். 'கவிதை உறவு' விழா ஒன்றிலும் சந்தித்தேன். என் நூல்களை அனுப்பிவைக்கச் சொன்னார். சிலவற்றை அனுப்பினேன்.
விரைவில் சந்திப்போம் என்றவர் விரைந்து சென்று விட்டார். ஆனாலும் அவரோடு அலைபேசியிலாவது ஆவது உரையாடினோமே என்று ஆறுதல் கொள்கிறேன்.
அவரது மறைவு கவிதை உலகுக்கு ஓர் இழப்பு.
என் ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- பிருந்தா சாரதி
Comments