மதிய நேர குட்டித் தூக்கத்தில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்.

 




மதிய நேர குட்டித்  தூக்கத்தில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்.



தூக்கம் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சிறந்த புத்துணர்வைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். பிற்பகலில் வேலைக்கு இடையே சிறிது நேரம் தூங்குவது மூளை செயல் பாட்டுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.



நாம் ஒவ்வொருவருக்கும் மூளை எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. அது உங்களின் செயல்களையும் அதனது எதிர்வினைகளையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, உங்களின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், புத்திக் கூர்மைக்கும் மிகவும் முக்கியமானது மூளை தான் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு முக்கியமான மூளையை புத்துணர்ச்சி பெற வைப்பது நமது தூக்கம் தான்.


​குட்டி தூக்கம்


அந்த தூக்கமானது சரியான நேரத்தில், சரியான அளவில் நமக்கு தினந்தோறும் கிடைக்குமேயானால், உங்களின் மூளையும் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


தூக்கம் குறித்த புதிய ஆய்வில், வழக்கமாக நாம் எப்போதும் பிற்பகலில் சிறிது நேரம் தூங்குவதால் நமது மூளையை கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என தெரிய வந்துள்ளது. ஆம் நீங்கள் சரியாகத் தான் படித்துள்ளீர்கள். பிற்பகல் தூக்கம் சோம்பேறித்தனம் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பகலில் தூங்கினால் மூளையின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது என்பது உண்மை தான்.


மதிய நேரத்தில் குட்டி துாக்கம் போடுவது மனிதர்களின் அறிவாற்றல் திறனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மதிய நேரத்தில் துாங்குவது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. அதே நேரம் மதியத்தில் குட்டி துாக்கம் போடுவது மனித ஆற்றலை மேம்படுத்துவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.


 


புதிர் போட்டி


பீஹாரின் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு, 18 - 24 வயது வரையிலான 68 பேரிடம் ஆய்வு நடத்தியது. அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, 'சுடோகு' (Sudoku) என்ற கணித புதிர் போட்டி அளிக்கப்பட்டது. அதில் கடுமையான கட்டத்தை அவர்கள் எட்டும் போது, ஒரு குழுவினரை ஒரு மணி நேரம் துாங்க அனுமதிக்கப்பட்டது.


மற்றொரு குழுவை துாங்காமல் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின், நிறுத்திய இடத்தில் இருந்து இரண்டு குழுக்களையும் புதிர் போட்டியை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.


இதில், குட்டி துாக்கம் போட்ட குழுவை சேர்ந்த பலர், புதிர் போட்டியை சரியாக முடித்தனர். அதே நேரம் துாங்காமல் ஓய்வெடுத்த குழுவில் புதிருக்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலர் திணறினர்.


இது குறித்து பாட்னா எய்ம்ஸ்(AIMS) மருத்துவமனையின் உடலியல் துறை கூடுதல் பேராசிரியர் கமலேஷ் ஜா கூறியதாவது: இந்த ஆய்வு துவக்கக்கட்டத்தில் உள்ளது. அதன் இடைக்கால முடிவுகளை தான் தற்போது வெளியிட்டுள்ளோம். இதில் மேலும் பல தன்னார்வலர்களை ஈடுபடுத்தி ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க அரசிடம் நிதி கேட்டு கோரிக்கை வைக்க உள்ளோம்


பலமடங்கு


மதிய நேரத்தில் குட்டி துாக்கம் போடுவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. அவர்களின் கணித திறன் உட்பட, உடலியல் திறன் பலமடங்கு மேம்படுகிறது என்று அவர் கூறினார். இதற்கிடையே, பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இரவு, 10:00 - 11:00 மணிக்குள் துாங்குவோருக்கு இருதயம் தொடர்பான பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.



பகிர்வு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,