இட்லி மாவு தோசை மாவு இல்லாத சமயத்தில் கூட இப்படி ஒரு தோசை

 இட்லி மாவு தோசை மாவு இல்லாத சமயத்தில் கூட இப்படி ஒரு தோசையை சுட்டு கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். தோசை வார்த்து அதன் மேலே இந்த வெங்காயம் தக்காளி மசாலாவைத் தடவி, அப்படியே ரோல் செய்து கொடுத்துப் பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அசந்து போய் விடுவார்கள்.



முதலில் ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் சீவி, ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெட்டிய உருளைக்கிழங்கை முதலில் போட்டுக்கொள்ள வேண்டும். இதோடு தயிர் – 1/2 கப், ஊற்றி உருளைக்கிழங்கை மைய அரைத்துக் கொள்ளுங்கள். ‌அரைத்த இந்த விழுதோடு ரவை – 1 கப், கோதுமை மாவு – 1/4 கப், சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இது தோசை மாவு பக்குவத்திற்கு நமக்கு கிடைக்க வேண்டும். மாவு ரொம்பவும் தண்ணியாக இருக்க கூடாது. இந்த மாவுக்கு தேவையான அளவு உப்பு, ஆப்ப சோடா – 1/4 ஸ்பூன், சேர்த்து நன்றாக கரைத்து 10 நிமிடங்கள் ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து விடுங்கள். மாவு 10 நிமிடங்கள் வரை ஊறட்டும்.


இந்த மாவு ஊறக்கூடிய 10 நிமிடத்தில் இதன் மேலே தடவ கூடிய மசாலாவை தயார் செய்துவிடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1/2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, மிக மிக பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, போட்டு நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் சுருங்கி அதன் பின்பு இந்த மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து வதக்கி, 2 தக்காளி பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து, அந்த விழுதை கடாயில் இருக்கும் மசாலாவில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

வெங்காயம் தக்காளி இரண்டும் சேர்ந்து தொக்கு பதம் வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். (தக்காளியில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் சுண்டி இருக்க வேண்டும்.) தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை இதன் மேலே தூவிக் கொள்ளலாம். அவ்வளவு தான். தோசையின் மேலே தடவி கூடிய மசாலாவும் பத்து நிமிடத்தில் தயாராகிவிட்டது. 


அடுப்பில் தோசைக்கல்லை வைத்துக் கொள்ளுங்கள். தோசைக்கல் மிதமான தீயில் சூடாக்கவும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, தயாராக இருக்கும் மாவை எடுத்து எப்போதும் போல தோசைக்கல்லில் ஊற்றி மெல்லிசாக தேய்த்து விடுங்கள். தோசை சிம்மிலேயே நன்றாக வேகட்டும். (தோசை வார்த்தை உடனேயே மேலே மாவு வேகுவதற்க்கு முன்பு உடனடியாக மசாலாவை தோசையின் மேலே தடவி விட்டால், மாவோடு மசாலா கலந்து தோசை சரியாக வராது.)


 தோசை மேலே இருக்கும் மாவு வெந்த பிறகு, தயார் செய்த மசாலாவில் இருந்து 2 டேபிள்ஸ்பூன் எடுத்து தோசையின் மேலே போட்டு அப்படியே ஸ்பூனால் தடவி பரப்பி விடவேண்டும். தேவைப்பட்டால் இதன் மேலே நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மீண்டும் 2 நிமிடம் போல தோசையை சிம்மிலேயே வேகவைத்து, தோசையை அப்படியே மசால் தோசை போல சுருட்டி, உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பிடக் கொடுத்துப் பாருங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. மொறு மொறுன்னு அத்தனை அருமையான சுவை இருக்கும்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,