கற்பூரவல்லி சட்னி | பிரண்டைக் காரக்குழம்பு | வெற்றிலைத் துவையல் -

 

கற்பூரவல்லி சட்னி | பிரண்டைக் காரக்குழம்பு | வெற்றிலைத் துவையல் -


கொரோனாவின் மூன்றாவது அலை வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. யாரைப் பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி என ஏதோ ஒரு பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். இப்போதைக்கு நமக்குத் தேவை நோய் எதிர்ப்பாற்றல். உணவின் மூலம் அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வார வீக் எண்டுக்கு மருந்து சமையல் ரெசிப்பீஸ் உங்களுக்காக...

கற்பூரவல்லி சட்னி

தேவையானவை:

கற்பூரவல்லி இலைகள் (ஓமவல்லி) - 15
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 5 (இரண்டாக நறுக்கவும்)
புளி - கோலிக்குண்டு அளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு,
எண்ணெய் - சிறிதளவு

கற்பூரவல்லி சட்னி
கற்பூரவல்லி சட்னி

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். உளுத்தம்பருப்பு சிவந்தவுடன் பச்சை மிளகாய், கற்பூரவல்லி இலைகள் சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விட்டுத் துவையலாக அரைத்து எடுக்கவும். சிறிதளவு எண்ணெயைத் தாளிக்கும் கரண்டியில் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியில் கலக்கவும். இதை இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.


பிரண்டைக் காரக்குழம்பு

தேவையானவை:

இளம் பிரண்டைத் துண்டுகள் - ஒரு கப் (ஓரத்தில் உள்ள நாரை நீக்கவும்)
தோலுரித்த சின்ன வெங்காயம், பூண்டுப் பல் - தலா 10
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பிரண்டைக் காரக்குழம்பு
பிரண்டைக் காரக்குழம்பு

செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, பிரண்டைத் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிரண்டை நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு: பிரண்டை முற்றியதாக இருந்தால், குழம்பு, சாப்பிடும்போது அரிக்கும்.

வெற்றிலைத் துவையல்

தேவையானவை:

வெற்றிலை - 10 (காம்பு, நடு நரம்பை நீக்கி நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் - 4
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டுப் பல் - 3 (பொடியாக நறுக்கவும்)
புளி - கோலிக்குண்டு அளவு
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வெற்றிலைத் துவையல்
வெற்றிலைத் துவையல்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும். இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: விரும்பினால் தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.

source:ttps://www.vikatan.com

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,