நிறைய பேச வேண்டும்
நிறைய பேச வேண்டும் போலிருக்கிறது.
மனதில் உள்ளதை ஒன்று விடாமல் துடைத்தெறிந்து வெளியே கொட்ட வேண்டும் போலிருக்கிறது.
அமைதி என்ற போர்வையை உதற வேண்டும் போலிருக்கிறது.
பின்னியிருக்கும் உதடுகளை பிரித்தெடுத்து ஓரிரு வார்த்தைகளை நிரப்ப வேண்டும் போலிருக்கிறது.
நாலைந்து ஆட்கள் கூடியிருக்கும் மத்தியில் சென்று நானும் இருக்கிறேன் பாருங்களேன் என்று கையை பிடித்து கெஞ்ச வேண்டும் போலிருக்கிறது.
அலைபேசியில் தொடர்பு குழுமத்திற்கு சென்று யாராவது பேசுவார்களா? யாரிடமாவது பேசலாமா? யாராவது இருக்கிறார்களா? என்று தேட வேண்டும் போலிருக்கிறது.
நான்கு சுவர்களின் சூழ்ந்திருக்கும் பகுதி நான்கு கரம் கொண்டு குரல்வளையை நெறிக்கிறது.
மீண்டு எழுந்து நின்று தன்னிலை மாற மனம் துடித்தாலும் ஏதோ ஒன்று திரும்ப தடுக்கிறது.
ஏன் இத்தனை மன தடுமாற்றம்?
ஏன் இத்தனை மன உளைச்சல்கள்?
ஏன் இத்தனை இடர்பாடுகள்?
அனைத்திற்கும் கேள்விகளே முதன்மையாக வந்து நிற்கிறது.
ஒன்றுக்கும் பதில் தெரியாமல், பதில் இல்லாமல் மனம் வெறுமையை நாடுகிறது.
எதற்கும் பதில் தெரியாத மனதிற்கு என்ன தோன்றும்.
நான் இப்படியே இருந்துக்கொள்கிறேனே என்று நத்தை தன் கூட்டிற்குள் செல்வது போல,
ஒரு நாய்க்குட்டி தன்னையே சுற்றிக் கொண்டு சுருண்டுக்கொள்வது போல அந்த பழைய தனிமைக்கே செல்ல தான் ஆயத்தமாகும்.
#ஸ்ரீநி
Comments