என் மனதில் என்ன உள்ளதோ, உண்மையை சொல்வதற்கு தயங்க மாட்டேன்
மோடிக்கு ஓட்டு போடவும் சொல்லவில்லை, ஓட்டு போட வேண்டாம் என்றும் சொல்லவில்லை - இளையராஜா
'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் இளையராஜா எழுதிய முன்னுரை சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்' என்று இளையராஜா எழுதிய முன்னுரையே இந்த சர்ச்சைக்கும் காரணமாக அமைந்தது.
அம்பேத்கரையும், மோடியையும் குறிப்பிட்டிருந்த இளையராஜாவின் கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் வலுத்து வருகிறது. பல்வேறு தரப்பினர் இளையராஜா தனது கருத்தை பின்வாங்க வேண்டும் என கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவினர் இளையராஜாவுக்கு ஆதராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இசைஞானியின் கருத்து, தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், இளையராஜா செய்த தவறு என்ன என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது, அதையே இளையராஜாவுக்கு மறுத்ததன் மூலம், திமுக தனது தலித் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தன்மையைக் காட்டியுள்ளது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே ” என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதுபற்றி இளையராஜா தனது சகோதரர் கங்கை அமரனிடம், 'நான் படத்தில் போட்ட டியூனையும் நல்லா இல்லை என்று சொன்னால் திரும்ப வாங்க மாட்டேன். என் மனதில் என்ன உள்ளதோ, உண்மையை சொல்வதற்கு தயங்க மாட்டேன். மற்றவர்களுடைய கருத்து வேறுமாதிரியாக இருக்கலாம். இது என்னுடைய கருத்து. மற்றவர்கள் கருத்து எனக்கு பிடிக்காவிட்டாலும், அது பிடிக்கவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். நான் கூறியதை அரசியலாக்க விரும்பவில்லை. மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றும் சொல்ல மாட்டேன். ஓட்டுப் போடாதீர்கள் என்றும் சொல்ல மாட்டேன்.' என்று கூறியுள்ளார். இந்த தகவலை நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கங்கை அமரன் தெரிவித்தார்
news couresey:https://tamil.news18.com/
Comments