‛இளையராஜாவின் அக்கா குருவி
உயிர், மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி, தற்போது குழந்தைகள் படத்தை இயக்கியுள்ளார். ‛அக்கா குருவி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா 3 பாடல்களை அவரே எழுதி, இசையமைத்துள்ளார். சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‛அக்கா குருவி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஏப்.,25) நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளையராஜா பேசியதாவது: உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படி சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை பார்க்கும்போது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.
ஒரு ஷூவை வைத்துக் கொண்டு குழந்தைகளின் உலகத்தை தத்ரூபமாக தந்திருந்தது சிறப்பான அனுபவத்தை தந்தது. ஏன் இத்தகைய படங்கள் தமிழில் வருவதில்லை என்று எனக்கு வருத்தமாக இருந்தது. நம்முடைய இயக்குனர்களிடம் உயர்வான சிந்தனை இல்லை. அந்தக் குறையை தற்போது இயக்குனர் சாமி போக்கியுள்ளார்.
தற்போது சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை நம்முடைய ஊருக்கு தகுந்தவாறு கதையை மாற்றி ஒரிஜினல் படத்தைவிட சுவாரஸ்யமாக இயக்குனர் சாமி கொடுத்துள்ளார். இதுபோன்ற புதிய இயக்குனர்கள் வரவேண்டும் என விரும்புகிறேன். நான் முதன்முறையாக இயக்குனர் மணிரத்னத்திற்கு இசையமைத்ததற்கு இதுதான் காரணம். இதுபோன்ற நல்ல படைப்புகளை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய படங்கள் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி: தினமலர்
Comments