கிராமங்களில் செய்யக்கூடிய எளிமையான மீன் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும்

 கிராமத்து சுவையில் சிம்பிளான மீன் குழம்பை இப்படி செய்து பாருங்கள். சட்டி நிறைய செய்தாலும் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது




கிராமங்களில் செய்யும்  சுவையை நம்மால் இப்பொழுது சாப்பிட முடியவில்லை. அவர்கள் செய்யும் கை பக்குவமே தனியாக இருக்கும். அடுப்பில் குழம்பு கொதிக்கும் பொழுதே பசியைத் தூண்டி விடும். அந்த அளவிற்கு அவர்களின் செய்முறை இருக்கும். அவர்கள் பெரிதளவில் மசாலாக்கள் சேர்க்கவில்லை என்றாலும் அந்த குழம்பின் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். அப்படி கிராமங்களில் செய்யக்கூடிய எளிமையான மீன் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


தேவையான பொருட்கள்: 

மீன் – அரை கிலோ, வெங்காயம் – 2, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 2, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், புளி – எலுமிச்சை பழ அளவு, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 100 கிராம், கடுகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து. கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து

செய்முறை: முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். பின்னர் எலுமிச்சைப்பழ அளவு புளியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

பிறகு புளியை நன்றாக கரைத்து வடிகட்டி புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரை கிலோ மீனை சுத்தம் செய்து, இரண்டு, மூன்று முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மீனில் வரும் ரத்த வாசனை குறைந்துவிடும்.


பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு சட்டியை வைக்கவேண்டும். பிறகு சட்டி நன்றாக சூடானதும் அதில் 100 கிராம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீருடன் 3 ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கரைசலையும் தக்காளி, வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். குழம்பு கொதித்து மிளகாய்த்தூள் வாசனை சென்றதும் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, பத்து நிமிடத்திற்கு அப்படியே வேகவிடவேண்டும். இறுதியாக கொத்தமல்லி தூவினால் சுவையான மீன் குழம்பு தயாராகிவிடும்.




Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி