காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு

 


பிரேசில் நாட்டில் நடைபெற்ற காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் வென்ற மதுரை மாணவி, 2 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்ற சென்னையைச் சேர்ந்தவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரேசில் நாட்டில் 24-வது காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மே 1-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி முடிவடைந்தது. இதில் தமிழகத்தின் சார்பில் மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயரட்சகன் என்பவரது மகளும், அரசுப் பள்ளி மாணவியுமான ஜெர்லின் அனிகா கலந்து கொண்டார். இறகு பந்து போட்டியின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று மாணவி ஜெர்லின் அனிகா சாதனை படைத்தார். இதேபோல், சென்னையைச் சேர்ந்த பிரித்திவி பேட்மிட்டன் போட்டியில் 2 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதையடுத்து, பிரேசிலில் இருந்து சென்னை வந்த ஜெர்லின் அனிகா மற்றும் பிரித்திவிக்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியி மண்டல முதல் நிலை மேலாளர் சுஜாதா, SDAT மேலாளர், வெங்கடேஷ், தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டு கவுன்சில் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெயரட்சகன் செய்தியாளர்களிடம் பேசியது: "2021-ல் நடக்க வேண்டிய போட்டிகள் 2022-ல் பிரேசிலில் நடைபெற்றது. ஒரு மாதமாக ஜெர்லின் அனிகா டெல்லியில் பயிற்சி மேற்கொண்டார்.2019-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். அவரது விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக அரசு சார்பில் வருடத்திற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கி தரப்பட்டது. அந்த உதவி எனது மகளின் விளையாட்டு திறனை வளர்க்க உதவிகரமாக இருந்தது. பிறந்ததிலிருந்து வாய் பேச முடியாத ஜெர்லினை பற்றி உலகமே பேசுகிறது. பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு கொடுத்த ஊக்கதொகை போல் ஜெரலினுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
பின்னர், பிரித்திவி செய்தியாளர்களிடம் கூறியது: "84 நாடுகள் பங்கேற்ற போட்டியில் மிகவும் கடுமையான சூழ்நிலையில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த ஒலிம்பிக் போட்டியில் முதல்முறை இந்தியா சார்பில் 3 பதக்கம் வென்றுள்ளேன். 2017-ஐ விட கடினமான போட்டியாக இருந்தது, நான் எதை பற்றியும் யோசிக்காமல், 100 சதவீதம் முயற்சி செய்தேன் அதனால் மூன்று பதக்கங்களை வென்றுள்ளேன். தமிழக முதல்வர் மிகப்பெரிய உதவி செய்திருந்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
நன்றி: இந்து தமிழ் திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,