மானுடம் வெல்லும்

 “தினமணியில் வந்த ‘வானம் வசப்படும்' தொடரின் வழியாகத்தான் பிரபஞ்சன் என்ற பெயர் எனக்கு அறிமுகமாகியது.



எனக்கு பிரபஞ்சம் என்ற பெயர் மீது பெரிய ஈர்ப்பு உண்டு, அதனால் என் இளம் வயதில் ‘உருஞாலன்' என்று பெயர் மாற்றி கவிதைகள் எழுதி, கூட்டங்களில் பேசியதும் உண்டு. ‘வானம் வசப்படும்' வழியாக பாண்டிச்சேரி என்ற நகரைப் பற்றி எனக்கும் எழும் சித்திரம் பிரபஞ்சன் உருவாக்கியதுதான். பிரபஞ்சனின் மொத்த படைப்பின் ஆதாரமாக இருப்பது மற்றமை மீதான அன்புதான்

. பெண்கள் மீது பரிவும் அன்பும் பிரபஞ்சனுக்கு எப்போதும் உண்டு. பிரபஞ்சனுக்கு பெண்கள் மீதான அன்பு என்பது ஒரு அறம்சார் அன்பாகத்தான் பார்க்கிறேன். பெண் படைப்பாளிகளை கூடுதலாக பாராட்டுகிறார் என்ற குற்றச்சாட்டை வைக்கிறவர்கள் அதற்கான பதிலாகவோ அல்லது அவரை புரிந்து கொள்ளவும் விரும்புகிறவர்கள் அவர் எழுதிய ‘சந்தியா' என்ற நாவலை வாசிக்க வேண்டும். சந்தியா நாவல்தான் அவரின் மனம். அவரின் மனம் பெண்ணின் மீதுள்ள அறம்சார்ந்து இயங்குவதால்தான் பெண்களின் படைப்புகளையும் பேரன்புடனே அணுகினார். ஆணாதிக்க சமூகத்தின் ஏக பிரதிநிதியாக தன்னை மாற்றிக்கொண்டு ஆணாதிக்க சமூக மீதான குற்றச்சாட்டுகளை தன்மீது வரித்துக் கொண்டது பிரபஞ்சனின் மனம். குழந்தைகள், பெண்கள், மற்றமை, இயலாதவர்கள் மீது பெரும் அன்பு கொண்டவர். எழுத்தை மட்டுமே வாழ்வாக கொண்ட படைப்பாளர்கள் எதிர்கொள்ளும் எல்லா நல்லது கெட்டதுகளையும் தன் வாழ்வில் சந்தித்தவர். பிரபஞ்சனின் வாழ்வு வெளிப்படையானது. நல்லது கெட்டதுகளால் நிறைந்தது. பிரபஞ்சனின் வாழ்வு சொல்லும் செய்தியும் படைப்பு சொல்லும் செய்தியையும் ஒற்றை வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் அது மானுடம் வெல்லும் என்பது தான்"

- லிபி ஆரண்யா
நன்றி: NDTV தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,