இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில்மாணவி சிந்துக்கு பரீட்சை எழுத ஆம்புலன்ஸ் வசதி
மாடியில் இருந்து தவறி விழுந்து இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார் சிந்து. தனது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தந்தையின் உதவியுடன் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரின் நிலையை அறிந்து அவருடைய கல்விச் செலவையும், மருத்துவச் செலவையும் தமிழக அரசு ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அவரை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவருடைய இல்லத்தில் சந்தித்து சிந்துவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
சிந்துசிந்து
சிந்துவின் தந்தை சக்தி கடை கடையாக சென்று டீ வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அதுவரை செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த சிந்துவின் தாய் தேவி வேலையை விட்டுவிட்டு சிந்துவை பார்த்துக் கொள்கிறார். பத்தாம் வகுப்பு வரையில் சுட்டிப் பெண்ணாக வலம் வந்துக் கொண்டிருந்தவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரே அறைக்குள் முடங்கிக் கிடக்கிறார். இரண்டு கால்களிலும் ஏகப்பட்ட ஆப்ரேஷன் செய்தும் அதற்கான பலன் எதுவும் கிடைக்கவில்லை. அவருடைய காலில் சீழ் வடிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த சீழ் வடிவதற்கு காலில் வைக்கப்பட்ட பிளேட் தான் காரணம் எனக் கூறி அதனை அகற்றியும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், இன்று வரை சீழ் குணமாகவில்லை.
கால் எலும்பு கூடுவதற்கும், சீழ் வருவதை சரி செய்வதற்கும் மருத்துவ ரீதியாக ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என சிந்து எதிர்பார்க்கிறார். அவர் கீழே விழுந்ததில் அவருடைய வாய்ப்பகுதியும் சேதமடைந்திருக்கிறது. சாப்பிடக் கூட முடியாமல் தவிக்கிறார். வாயை சரி செய்ய வேண்டுமெனில் அதற்கு முதலில் காலையும், சீழ் வடிதலையும் சரி செய்ய வேண்டும் என்கிறார்களாம் பல் மருத்துவர்கள். வாலிபால் பிளேயர் ஆக வேண்டும் என்கிற ஆசையோடும், மிலிட்டரியில் வேலை பார்க்க வேண்டும் என்கிற லட்சியத்துடனும் இருந்தவரின் வாழ்க்கை இந்த அளவிற்கு தலைகீழாய் மாறும் என அந்தக் குடும்பத்தில் ஒருத்தரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிந்துவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியபோது, சிந்துவும் அவரது தந்தை சக்தியும் தேர்வு எழுத சென்று வருவதற்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக அரசு அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்திருக்கிறது.
நன்றி: விகடன்
Comments