பிரியா விடை தருகிறோம்

 பிரியா விடை தருகிறோம்

ப்ரியா கல்யாணராமன்

*




இந்த வாரக் 'குமுதம்' இதழில்  என் கவிதை ஒன்று பிரசுரமாகி இருக்கிறது. அதற்கு நன்றி கூட  இன்னும் கூறவில்லை. அதற்குள் விடை பெற்றுவிட்டார் 'குமுதம்' பொறுப்பாசிரியர் பிரியா கல்யாணராமன்.


சென்னை வந்தது முதலே அறிமுகமாகமானவர் ப்ரியா கல்யாணராமன். அடிக்கடி சந்திக்க விட்டாலும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவோம்.


 'ஆனந்தம்' திரைப்படத்தைக் குமுதம் அப்படி பாராட்டி வாழ்த்தியது. அதன்பிறகு 'பையா' போன்ற படங்கள் வெளியானபோது எவ்வளவு பேட்டிகள்... செய்தி கட்டுரைகள்... வெளியிட்டு உற்சாகப்படுத்தியது.


தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரு உறவு எனக்கும்  பிரியா கல்யாணராமன் அவர்களுக்கும் இருந்தது. அடிக்கடி குமுதத்திற்கு கவிதை எழுதுங்கள் என்று  என்று உற்சாகப் படுத்தியவர். இந்த வாரம் கூட தெக்கூர் அனிதாவிடம் அவரை அடிக்கடி எழுதச் சொல்லுங்கள் என்று கூறினார் என்றார் அனிதா. 


ஒவ்வொரு நூல் வெளியாகும்போதும் 'குமுதத்தி'ற்கு அனுப்பி வைப்பேன். பு(து)த்தகம் பகுதியில் உடனே அறிமுகம் எழுதுவார். 'தீராநதி'யில் நீண்ட மதிப்புரை வெளிவரும். 


என்னை போல எத்தனையோ பேரை ஊக்குவித்தார். இன்று நிரந்தர ஓய்வெடுக்க போய்விட்டார். 

*

ஒரு வாரப் பத்திரிகை என்பது பலதரப்பட்ட வாசகர்களின் தேவைகளை நிறைவேற்றும் பெரும் சமையல் கூடம். எல்லாவித உணவும் பரிமாறப்படும் ஒரு மாபெரும் பந்தி. அதை நினைத்து பார்த்தாலே மலைப்பு ஏற்படும் . மாநாடு ஒன்றை நடத்தி மாபெரும் விருந்து தரவேண்டும். அதன் வேலைகள் பல அடுக்குகள் கொண்டது. பட்டியல் போடவே நம்மால் முடியாது. ஆனால் அதை செய்து காட்டுபவர்கள் பெரும் பத்திரிகை ஆசிரியர்கள். குமுதமோ நம்பர் ஒன் வார இதழ். ப்ரியா கல்யாணராமன் 

அதை பல்லாண்டுகளாகத் திறம்படச் செய்தார்.


எவ்வளவு எழுத்தாளர்கள் ....

எவ்வளவு வாசகர்கள் ...

எவ்வளவு உழைப்பாளிகள்...

எல்லோரையும் ஒருங்கிணைத்து தினசரி திருவிழா நடத்தினார். 


அதுதவிர பத்து துணைப் பத்திரிக்கைகள்... 


சிறுகதை, நாவல், கேள்வி பதில், ஆன்மீகக் கட்டுரைகள், பயண அனுபவக் கட்டுரைகள்.... என எழுதிக் குவித்தவர். 'தமிழச்சி ஆண்டாள் ' மாபெரும் உழைப்பு.


எல்லாவற்றுக்கும் ஒரு கணத்தில் 'டாட்'. 


அந்த 'டாட்' அனைவருக்கும் உண்டு. இது ஒரு எச்சரிக்கை மணி.


இதயம் இந்தச் செய்தியை ஏற்க மறுக்கிறது. வாழ்க்கை சிறியது என்று ப்ரியாவின் பிரிவு மீண்டும் உரைக்கிறது. போய் வாருங்கள் ப்ரியா. பிரியா விடை தருகிறோம்.

*

பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,