சுஜாதாவிற்குள் இருந்த மனிதனை எனக்குப் பிடித்துப் போனது

 


வாசகன் விழாவிற்கு சுஜாதாவை அழைத்திருந்தோம். அப்போது அவர் பெங்களூரில் இருந்தார். அதிகாலைப் பொழுதில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரை வரவேற்கப் போயிருந்தேன். எழுத்துக்களின் மூலம் இருவருக்கும் அறிமுகம் இருந்தாலும் அப்போதுதான் முதலில் சந்திக்கிறோம். அவரை அழைத்துச் செல்ல வாகனம் ஏதும் இல்லை. கறுப்பு மஞ்சள் வாடகைக்காரைக் கூட அமர்த்திக் கொள்ளவில்லை.அவர் தங்க விடுதி ஏதும் ஏற்பாடு செய்திருக்கவில்லை.பேசிக் கொண்டே சாலையைக் கடந்து பொது மருத்துவமனை வாயிலில் அமைந்திருந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து 21சி பேருந்தில் இருவரும் ஏறிக் கொண்டோம். காய்கறிக் கூடைகளும், பூக்கூடைகளும், பஸ்ஸில், ரயிலில் வந்தவர்களது பயண மூட்டைகளும் இடறிக் கொள்ளுமளவு ஏராளமாக இறைந்து கிடந்தன. எங்களுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. நின்று கொண்டே வந்தோம். நெடிய உயரம் கொண்ட சுஜாதா கூரையில் தலை தட்டாமல் இருக்கச் சற்றே குனிந்து கொண்டே வந்தார். ஆனால் சற்றும் சலிக்காமல், சற்றும் சளைக்காமல் பேசிக் கொண்டே வந்தார். பேசிக் கொண்டே வந்தோம். பேசிக் கொண்டே மயிலாப்பூர் வள்ளுவர் சிலை அருகே இறங்கி பேசிக் கொண்டே அவரது மாமனார் வீட்டுக்குப் போய் விட்டு வந்தேன்.
மறுநாள் காலை அவரை பிருந்தாவன் எக்ஸ்பிரசில் (இரண்டாம் வகுப்பு சேர் கார்) ஏற்றிவிட்டபோது ஏகக் கூட்டம். திங்கள் கிழமை. பணிக்குத் திரும்பும் இளைஞர்களாலும் யுவதிகளாலும் பெட்டி நிறைந்திருந்தது. ஆட்டோகிராஃப் வாங்க ஓரு கூட்டம் அவரைச் சூழ்ந்து நின்றது. ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த என்னைக் காட்டி “தெரியுமா?” என்றார். விடை தெரியாமல் விழித்தவர்களைப் பார்த்து “ மாலன்!” என்றவர் “கணையாழி படியுங்க!” என்றார்.
எந்த வித பந்தாவும் இல்லாமல், “ஒரு டாக்சி கூடவா கொண்டு வரவில்லை?” என்று கேள்வி எழுப்பாமல், எங்களோடு இசைந்து பழகிய சுஜாதாவிற்குள் இருந்த மனிதனை எனக்குப் பிடித்துப் போனது

நன்றி: maalan.co.inமாலன் கட்டுரை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,