சின்ன அண்ணாமலை
ஜூன் 18, வரலாற்றில் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் பதிப்புலக முன்னோடிகளில் ஒருவருமான சின்ன அண்ணாமலை (Chinna Annamalai) பிறந்த தினம் இன்று.
காரைக்குடி அருகே உள்ள சிறுவயல் கிராமத்தில் (1920) பிறந்தார். இயற்பெயர் நாகப்பன். தேவகோட்டை உறவினர் குடும்பத்துக்கு சுவீகாரம் கொடுக்கப்பட்ட இவருக்கு அண்ணாமலை என்று பெயரிடப்பட்டது.
தன் வீட்டில் காந்திஜியை நேரில் பார்த்ததால், 9 வயதிலேயே இவரது மனதில் காந்தியமும், தேசப்பற்றும் வேரோடின. 13ஆவது வயதில் சுதந்திரப் போராட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனந்த விகடனில் கல்கி எழுதிய தலையங்கங்களை மனப்பாடம் செய்து மேடைகளில் பேசி, பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார்.
ராஜாஜியின் கள்ளுக்கடை மூடல் போராட்டத்துக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், உயர்நிலைப் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, போலீஸ் தடையை மீறி தேவகோட்டை பொதுக்கூட்டத்தில். பேசியதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாடு விடுதலையடைந்த பிறகு, சென்னை வந்தார். ஏ.கே.செட்டியார், சக்தி வை.கோவிந்தன், வெ.சாமிநாத சர்மா ஆகியோர் ‘தமிழ்ப் பண்ணை’ புத்தக நிலையத்தை இவருக்காக ஆரம்பித்துக் கொடுத்தனர். ராஜாஜி, கல்கி, டி.கே.சி., வ.ரா., தி.ஜ.ர உள்ளிட்டோரின் படைப்புகளை வெளியிட்டார். சிறந்த எழுத்தாளரான இவர் பல நூல்களைப் படைத்துள்ளார்.
ம.பொ.சி எழுதி வெளியிட்ட ‘வ.உ.சிதம்பரம் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலை, அவரையே விரிவாக எழுத வைத்து ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெயரில் மறுபிரசுரம் செய்தார். பல புதிய பதிப்பாளர்களை உருவாக்கினார். காந்திஜியிடம் நேரடியாக அனுமதி பெற்று அவரது ‘ஹரிஜன்’ இதழை தமிழில் தனது பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ‘வெள்ளிமணி’ என்ற வார இதழையும் தொடங்கினார்.
தேசியச் செல்வர்’, ‘சிரிப்புக்கு ஒரு சின்ன அண்ணாமலை’ என் றெல்லாம் போற்றப்பட்ட சின்ன அண்ணாமலை 1980 ஜூன் 18ஆம் தேதி தனது 60ஆவது பிறந்தநாள் விழாவின்போது காலமானார். எனவே இவருடைய பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒன்றே !
Comments