சிவாஜி நினைவு நாள் அபூர்வ தகவல்கள் சிவாஜி

 சிவாஜி நினைவு நாள்

 


அபூர்வ தகவல்கள் சிவாஜி

* நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப் பிரவேசம், 1952ஆம் ஆண்டில் "பராசக்தி' மூலமாகத்தான் என்பதில், ஒரு சிறு திருத்தம் மேற்கொள்ளலாம். ஹெச்.எம்.ரெட்டி என்பவர் தயாரித்து - இயக்கிய "நிரபராதி' என்ற படத்தில், நாயகனாக நடித்த முக்காமலா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, நமது நடிகர் திலகம் பின்னணிக் குரல் கொடுத்ததன் மூலமாக, "பராசக்தி'க்கு முன்பே 1951 ஆம் ஆண்டிலேயே திரையுலகப் பிரவேசம் செய்துவிட்டார். ("நிரபராதி' தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்.)

 

 * கே.வி.மகாதேவனின் உதவியாளர் டி.கே.புகழேந்தி தனித்து இசையமைத்த (4 படங்களில்) ஒரு படம், "குருதட்சணை' என்ற சிவாஜி கணேசன் நடித்த படமாகும்.

 

 * சிவாஜி கணேசனுக்கு இயக்கவும் தெரியும் என்றால் நம்ப முடிகிறதா? அவர் ஒரு திரைப்படத்தை இயற்றி இருக்கிறார். அவர் முழுப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும், ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று வைத்துக் கொள்ளலாம். "ரத்தபாசம்' என்ற படத்தை இயக்கியவர், பாதி படத்திற்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார். படத்தின் எழுத்துப் பகுதியில் (டைட்டில்) இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய இடத்தில் எவரது பெயரும் திரையில் வராமல், சிவாஜி கணேசனின் குளோசப் போட்டோக்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்படும்.

 

 * நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "இரு துருவம்' என்ற படத்தின் கதையை எழுதியவர் இந்தி நடிகர் திலிப்குமார். இது "சங்கா உடுடு' என்கிற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

 

 * நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "சரித்திர நாயகன்' என்ற படத்தின் கதையை, தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் எழுதியுள்ளார். தெலுங்குப் படத்தில் என்.டி.ஆர்.தான் கதாநாயகன். அதன் தழுவலாக எடுக்கப்பட்ட படம் "சரித்திர நாயகன்'.

 

 * சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.செüந்தர

 ராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோர் சிவாஜி கணேசனுக்காக ஒரு படத்தில் யாராவது ஒருவர் மட்டும் பின்னணி பாடியிருப்பார்கள். ஆனால், "வணங்காமுடி' என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, டி.எம்.செüந்தரராஜன் ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு பாடல்களுக்குப் பின்னணி பாடியிருப்பார்கள். அதேபோல, "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு ஜே.பி.சந்திரபாபு, ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம் ஆகிய மூன்று பேர் பின்னணி பாடியிருப்பார்கள்.

 

 * நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, வி.என்.சுந்தரம் இரண்டு பாடல்களை பின்னணி பாடியுள்ளார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படத்தில் வெற்றி வடிவேலனே என்ற பாடலையும், "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

 

 * நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக எஸ்.சி.கிருஷ்ணன், "ராஜா ராணி' என்ற படத்தில் (கண்ணற்ற தகப்பனுக்கு) பூனை கண்ணை மூடினால் என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே பின்னணி பாடியுள்ளார்.

 

 * நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அஜித்சிங் என்பவர், "தவப்புதல்வன்' என்ற படத்தில் லவ் ஈஸ் ஃபைன் டார்லிங் என்ற ஒரே ஒரு ஆங்கிலப் பாடலை பின்னணி பாடியுள்ளார்.

 

 * நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, இசையமைப்பாளர் கண்டசாலா, "கள்வனின் காதலி' என்ற படத்தில் வெய்யிற்கேற்ற நிழலுண்டு என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.

 

 * நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக தெலுங்கு பின்னணிப் பாடகர் எம்.சத்தியம் என்பவர், "மங்கையர் திலகம்' என்ற படத்தில் "நீ வரவில்லை எனில் ஆதரவேது' என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.

 

 * நடிகர் திலகம் நடித்த படங்களில், பாரதியார் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே படம், "கப்பலோட்டிய தமிழன்.'

 

 * பூஜ்ஜியம் என்ற சொல் இடம்பெற்ற ஒரே பாடல், (நடிகர் திலகம் நடித்த "வளர்பிறை' படத்தில் வரும்) "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை" என்ற பாடலாகும்.

* பன்னிரண்டு மாதங்களின் பெயர்களும் இடம்பெற்ற இரு திரைப் பாடல்களில் ஒன்று, நடிகர் திலகம் நடித்த "ராஜராஜ சோழன்' படத்தில் இடம்பெற்ற, "மாதென்னைப் படைத்தான்' என்ற பாடலாகும்.

 

 * சிவாஜி நடித்த படங்களில் பாடல்கள் இருந்தும், சிவாஜி பாடாமல் இருக்கும் படங்கள் "மோட்டர் சுந்தரம் பிள்ளை', "தில்லானா மோகனாம்பாள்' ஆகிய படங்களாகும்.

 

 * பாடல்களே இல்லாத முதல் தமிழ்த் திரைப்படம் நடிகர் திலகம் நடித்த "அந்தநாள்' படமாகும்.

 

 * இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே தமிழ்ப் படம், நடிகர் திலகம் நடித்த "பைலட் பிரேம்நாத்' என்பதாகும்.

 

 * எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களை மட்டுமே இயக்கிய இயக்குநர் எம்.ஏ.திருமுகம், நடிகர் திலகம் நடித்த "தர்ம ராஜா' என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார்.

 

 * மனோரமா, நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த ஒரே படம், "ஞானப் பறவை' மட்டுமே.

 

 * தமிழ் சினிமாவின் முதல் அகன்ற திரைப் (சினிமா ஸ்கோப்) படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'ராஜராஜ சோழன்' திரைப் படமாகும்.

 

 * தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ணப் படம், நடிகர் திலகம் நடித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்' (1956) படமாகும். (1952 இல் திரையிடப்பட்ட "ஆன்' (கௌரவம்) என்ற படம், முழு நீள டெக்னிக் வண்ணப் படம் என்றாலும், அது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட படமாகும். (எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்' (1956) என்ற படம், தமிழ் சினிமாவின் முதல் முழு நீள கேவா வண்ண படமாகும்).

 

 * நடிகர் திலகம் கெüரவ வேடத்தில் நடித்த தமிழ் படங்கள் மர்ம வீரன், குழந்தைகள் கண்ட குடியரசு, தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை, தாயே உனக்காக, சினிமா பைத்தியம், உருவங்கள் மாறலாம், நட்சத்திரம், தாவணிக் கனவுகள், மருமகள், சின்ன மருமகள், பசும்பொன், ஒன்ஸ்மோர், தேவர் மகன், என் ஆச ராசாவே, மன்னவரு சின்னவரு, புதிய வானம், ஜல்லிக்கட்டு, படையப்பா, பூப்பறிக்க வருகிறோம் ஆகியவை.

 

 * நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த படங்கள் உத்தம புத்திரன், எங்க ஊர் ராஜா, கெüரவம், என் மகன், மனிதனும் தெய்வமாகலம், சந்திப்பு, ரத்த பாசம், சிவகாமியின் செல்வன், பாட்டும் பரதமும், என்னைப் போல் ஒருவன், புண்ணிய பூமி, எமனுக்கு எமன், விஸ்வரூபம், வெள்ளைரோஜா, பலே பாண்டியா (3 வேடங்கள்), தெய்வ மகன் (3 வேடங்கள்), திரிசூலம் (3 வேடங்கள்), நவராத்திரி (9 வேடங்கள்) .

 

 * "பராசக்தி' படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு முதல், பூப்பறிக்க வருகிறோம் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் வரை, சுமார் 100 இயக்குநர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்துள்ளார். சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கியவர்கள் ஏ.சி.திருலோகசந்தர் (20 படங்கள்), ஏ.பீம்சிங் (17 படங்கள்) .

 

 * படத் தயாரிப்பைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தை வைத்து அதிக (17 படங்கள்) படங்களை தயாரித்தவர் நடிகர் கே.பாலாஜி மட்டுமே.

 

 * பண்டரிபாய் முதல் சுமார் 55 கதாநாயகிகள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களில் கே.ஆர்.விஜயா 40 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்கள்.

 

 * ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள், "பலே பாண்டியா' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "சாந்தி' படத்தில் தாயாகவும் நடித்துள்ளார்.

 

 * ஜெயலலிதா, "மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், பல படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "பாட்டும் பரதமும்' படத்தில் நடிகர் திலகத்துக்கு தாயாகவும் நடித்துள்ளார்.

 

 * நடிகை லட்சுமியின் தாயார் குமாரி ருக்மணி, "கப்பலோட்டிய தமிழன்'படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "ரோஜாவின் ராஜா' படத்தில் தாயாகவும், "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மாமியாராகவும் நடித்துள்ளார்.

 

 * நடிகை லட்சுமி, எதிரொலி, தங்கைக்காக, அருணோதயம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், ராஜராஜ சோழன் படத்தில் மகளாகவும், உனக்காக நான், தியாகம், நெஞ்சங்கள், ராஜரிஷி, ஆனந்தக் கண்ணீர் ஆகிய படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

 

 * நடிகை ஸ்ரீதேவி, நடிகர் திலகத்தின் மகளாக பைலட் பிரேம்நாத் படத்திலும், ஜோடியாக விஸ்வரூபம், சந்திப்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

 

 * நடிகை சுமித்ரா, அண்ணன் ஒரு கோயில் படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், வீர பாண்டியன் படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

 

 * விஜயகுமாரி, பார் மகளே பார் படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், குங்குமம், ராஜராஜ சோழன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், பச்சை விளக்கு படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், அன்பைத் தேடி படத்தில் நடிகர் திலகத்துக்கு அக்காவாகவும் நடித்துள்ளார்.

 

 * தம்மை விட வயதில் மூத்தவரான பி.பானுமதியுடன் சில படங்களில் சிவாஜி இணைந்து நடித்துள்ளார்.

 

 * குங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ஆகிய இரு படங்களில் சிவாஜி பெண் வேடங்களில் நடித்துள்ளார்.

 * பாபு, சம்பூர்ண ராமாயணம், லட்சுமி கல்யாணம், காவல் தெய்வம், படிக்காத பண்ணையார், மூன்று தெய்வங்கள் இன்னும் சில படங்களில் சிவாஜி நடித்த பாத்திரங்களுக்கு, கதாநாயகிகள் கிடையாது.

 

 * மராட்டிய மாமன்னர் வீர சிவாஜியாக நடிகர் திலகம் முழுப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் "ராமன் எத்தனை ராமனடி' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சிவாஜியாக சிவாஜி நடித்திருக்கிறார்.

 

 * தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 80 அடி உயர விளம்பர பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது, சிவாஜி நடித்த வணங்காமுடி (1957) படத்திற்கே.

 

 * "திரையுலக இளவரசன்' நடிக்கும் என்ற விளம்பரத்துடன், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப் பார் (1953) என்ற படத்திற்குதான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக பட முன்னோட்டம் (டிரெய்லர்) காட்டப்பட்டது.

 

 * இலங்கை வானொலியில் நல்ல தமிழ் கேட்போம் என்ற தலைப்பில், வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்களுக்கு புகழ் பெற்ற திரைப்படங்களின் கதை -வசனங்களை ஒலி பரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி, இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம் போன்ற சிறந்த படைப்பாளிகளின் திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப் படும். சிவாஜி நடித்த திருவிளையாடலில் தருமியும் சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் பேசும் வசனம், பராசக்தியில் நீதிமன்றக் காட்சி, ராஜா ராணியில் உள்ள சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.

 - சிவ.குகன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

 நடித்த மொத்த படங்கள் - 306

 

 கதாநாயகனாக நடித்த

 தமிழ் படங்கள் - 262

 

 கதாநாயகனாக நடித்த

 பிறமொழி படங்கள் - 14

 

 கெüரவ வேடத்தில் நடித்த

 தமிழ் படங்கள் - 19

 

 கெüரவ வேடத்தில் நடித்த

 பிறமொழி படங்கள் - 11

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்

 1960 இல் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்க பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனுக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் பெற்று தந்தது.

 1966 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

 1969 இல் தமிழக அரசு வழங்கிய சிறந்த நடிகர் விருது பெற்றார்.

 1969 இல் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது பெற்றார்.

 1984 இல் பத்மபூஷன் விருது பெற்றார்.

 1986 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு கெüரவ டாக்டர் பட்டம் அளித்தது. நடிகர் திலகம், சிம்மக் குரலோன், கலைக் குரிசில் - என்ற பட்டப் பெயர்களாலும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இந்திய அஞ்சல் துறையானது, இவரின் படம் பதித்த 4 ரூபாய்க்கான அஞ்சல் தலையை வெளியிட்டு நடிகர் திலகத்தை கெüரவம் செய்தது. "கப்பலோட்டிய தமிழன்' படத்திற்கு, அரசு வரிவிலக்கு அளித்து, வ. உ.சி அவர்களையும், நடிகர் திலகம் அவர்களையும் கெüரவம் செய்தது.

 1995 இல் பிரான்ஸ் நாட்டில் வழங்கப் பட்ட செவாலியே விருது பெற்றார்.

 1996 இல் குடியரசுத் தலைவரிடம் தாதாசாகிப் பால்கே விருது பெற்றார்.

 

 shared


 

  


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,