பிரான்ஸ் அரசு வழங்கும் 'செவாலியே விருது' காலச்சுவடு' கண்ணனுக்கு
பத்திரிகையாளரும் பதிப்பாளருமான 'காலச்சுவடு' கண்ணனுக்கு பிரான்ஸ் அரசு வழங்கும் 'செவாலியே விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிப்புத்துறையில் இந்தியாவிற்கும், ஃபிரான்சிற்குமான உறவை மேம்படுத்தியதற்காக காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் பத்திரிக்கை மற்றும் இலக்கிய உலகில் கவனம் பெற்று வருகிறது.
தமிழகத்தில் இதற்கு முன்பாக இந்த விருது சிவாஜி கணேசன், கமல்ஹாசன், வெ.ஸ்ரீ ராம்(மொழிபெயர்ப்பாளர்) போன்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நவீன தமிழ் எழுத்தாளர்களின் புகழ்பெற்ற சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன். பொறியியல் படித்துவிட்டு பதிப்புத்துறைக்கு வந்தவர் இவர். சுந்தர ராமசாமியால் தொடங்கப்பட்டு பின்னர் பாதியிலேயே நின்று போன காலச்சுவடு இதழை மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கி நடத்திவருகிறார். தமிழ் படைப்புகளை இந்தியா கடந்து பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தி அதன் எல்லைகளை விரிவுபடுத்தும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார். அதேபோல் பிற நாட்டு சிறந்த படைப்புகளை தமிழுக்கு கொண்டு வந்து தமிழ் அறிவுலகத்துக்கு புதிய கதவுகளை திறந்துவிடுகிறார்.
காலச்சுவடு பதிப்பகம் மூலம் தமிழ் படைப்புகள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளுக்கு சென்று அங்கு வாசகப் பரப்பை உருவாக்கி வருகின்றன. அங்கிருந்தும் தொடர்ந்து நூல்கள் தமிழ் மொழிக்கு வந்துகொண்டிருக்கின்றன.பதிப்பு பணியோடு அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் கண்ணன் தொடர்ந்து எழுதி வருகிறார். எது கருத்து சுதந்திரம்?, அகவிழி திறந்து உள்ளிட்ட சில நூல்களையும் எழுதியுள்ளார்.
பிரெஞ்சு அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான செவாலியே விருது காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பதிப்பு துறையில் இந்தியாவிற்கும் பிரெஞ்சுக்குமான உறவை மேம்படுத்தியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகம் மூலம் தமிழ் படைப்புகளை இந்தியா கடந்து , பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தி அதன் எல்லைகளை விரிவுபடுத்தும் வேலையை செய்து வரும் கண்ணனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழின் மிகச் சிறந்த பதிப்பாளர்களுள் ஒருவரான காலச்சுவடு கண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் அரசு வழங்கும் ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழைக் கெளரவிக்கும் ஃப்ரெஞ்சுக்குப் பாராட்டுக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
Comments