நகைச்சுவை எழுத்தில் தனித்துவம் காட்டிய பிதாமகர்
வாழ்நாள் முழுதும் நான் நன்றிக் கடன் பட்டவர்களில் முக்கியமானவர் சாவி சார்.
நகைச்சுவை எழுத்தில் தனித்துவம் காட்டிய பிதாமகர். நூற்றுக்கணக்கான விழுதுகளை உருவாக்கிய பத்திரிகை உலக ஆலமரம்.
பத்திரிகை ஆசிரியராக, வெளியீட்டாளராக பல புதுமைகள் செய்தவர். பல முதல் முயற்சிகளைச் செய்தவர். சாவி, மோனா, பூவாளி, சுஜாதா, திசைகள் இதழ்களை அப்போது படித்து மகிழ்ந்தவர்களுக்கு மட்டுமே அவரின் வீச்சும் வீரியமும் சரியாகப் புரியும்.
தேசத்தலைவர்களுடன், மாநிலத் தலவர்களுடன் நெருக்கமான நட்பில் இருந்த அவர் நினைத்திருந்தால் அரசியலில் பல பதவிகள் கிடைத்திருக்கும். ஆனால் பத்திரிகை உலகம்தான் அவரின் பசி, தாகம், தூக்கம், மூச்சு எல்லாமுமாக இருந்தது.
என்னைத் தொடர்ந்து பல வகையிலும் ஊக்குவித்தபடியே இருந்தார். என் கடவுள் தந்தை. என்னை பத்திரிகை உலகில் தன் தத்துப்பிள்ளை என்று குறிப்பிட்டுக் கொண்டாடியவர்.
முதல் குறுநாவல், நாவல், தொடர்கதை, உதவி ஆசிரியர் பதவி என்று பல முதல்கள் அவரால்தான்.
அவரின் பாராட்டுக்களை ஏந்திய கடிதங்களைப் பொக்கிஷமாக பாதுகாக்கிறேன். அவரின் அறிவுரைகள் இப்போதும் கண் மூடி அமர்ந்தால் காதருகில் ஒலிக்கிறது.
இந்த 106 ஆவது பிறந்த நாளில் அந்த உயர்ந்த ஆத்மாவை நெகிழ்வுடன் நன்றியுடன் நினைவில் ஏந்துகிறேன்.
by
Comments