இந்திர ஏகாதசி! பித்ரு தோஷம் போக்கும் விசேஷமான நாள்!

 இந்திர ஏகாதசி! பித்ரு தோஷம் போக்கும் விசேஷமான நாள்!




 செப்டம்பர் 21 இந்திர ஏகாதசி நாளன்று விரதம் இருந்தால், பித்ரு தோஷம் போகும், நரகத்தில் இருந்தும் விடுதலை கிடைக்கும் விசேஷமான நாள்!


 புரட்டாசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி என்று அறியப்படுகிறது. புராட்டாசி மாதம் முழுவதுமே வழிபாட்டுக்கு உரியதாக கருதப்படுகிறது என்றால், பித்ருக்களுக்கான கடமைகள் இந்த மாதத்தில் அதிக அளவில் செய்யப்படுகின்றன. அந்த வகையில், புரட்டாசி மாசம் வரும் இந்த இந்திர ஏகாதசி பித்ருக்களின் சாபத்தை நீக்கும் வாய்ந்தது. ஜாதகத்தில் பித்ரு சாபம் உள்ளவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் பித்ரு சாபங்கள் நீங்கி குடும்ப வாழ்க்கையில் நிம்மதியைக் காணலாம். இந்திர ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, விஷ்ணுவை வணங்குவது வாழ்க்கையை மேம்படுத்தும். நமது முன்னோர்களின் ஆசிகள் கிடைத்து, நமது பிள்ளைகளும் எதிர்கால சந்ததியினரும் வளமாய் நலமாய் வாழ்வார்கள்.


 பெருமாளுக்கு உகந்தது ஏகாதசி என்றால், புதன்கிழமையும் பெருமாளுக்கான நாள் தான். புதன் கிழமையில் ஏகாதசி திதி இணைந்து வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக விரதம் இருக்க உகந்த நாளாக நாளைய தினம் (செப்டம்பர் 21) இருக்கிறது. புராணங்களின்படி, தேவலோக அதிபதியான இந்திரன் அனைத்து சுகபோகங்களுக்கு அதிபதி ஆவார்.


 இந்த இந்திர ஏகாதசி விரதம் வைப்பவர்களுக்கு, இந்திரனுக்கு கிடைத்த சுகபோகங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புராண கதையின்படி, மஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு வந்த நாரத முனிவரை மன்னன் வணங்கினார்.


 எமலோகத்தில் இருந்து வருகிறேன் என்று மன்னரிடம் சொன்ன நாரதர், அங்கு அரசனின் தந்தை கடுந்துயரை அனுபவித்து வருவதாக சொன்னார். துயரத்தில் துன்பப்பட்ட அரசரின் தந்தை, தனது மகன் இந்திரசேனனை இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்ய சொல்லி அனுப்பி விட்டதாக தெரிவித்தார். மகன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நரகத்தில் இருக்கும் தந்தை விடுதலை பெறுவார் என்றும், தன்னை கரையேற்றும்படி மகனுக்கு நாரதரிட செய்தி அனுப்பியிருந்தார் அரசரின் தந்தை.


 தந்தையின் வேண்டுகோளை ஏற்ற இந்திரசேனன் மன்னன், இந்திர ஏகதசி விரதத்தைக் கடைபிடித்து, தனது தந்தைக்கு முக்தி கிடைக்கச் செய்தார் என்பது புராணக் கதை. இதில் இருந்ஹு இந்த விரதம் எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்துக் கொள்ளலாம்.


 செப்டம்பர் 21 புதன்கிழமையான நாளை கடைபிடிக்கப்படும் விரதத்தை கடைபிடித்து முன்னோர்களை மகிழச் செய்யலாம். இந்திரா ஏகாதசியன்று விரதம் இருந்து, விஷ்ணுவை வழிபட்டால், முன்னோர்களுக்கு முக்தி கிடைக்கும்.


 வழிபாட்டு முறை

இந்து நாட்காட்டியின் படி, இரவு 9 மணி முதல் செப்டம்பர் 21 புதன்கிழமை இரவு 11 மணி வரை தொடரும். இந்திரா ஏகாதசி நாளில் அதிகாலையில் எழுந்து நீராடுங்கள். பின்னர் விஷ்ணுவை பிரார்த்தனை செய்து, நீங்கள் வழக்கமாக செய்யும் பூஜைகளை செய்யவும்.  தீபம் ஏற்றி, விஷ்ணுவுக்கு ஆரத்தி செய்யுங்கள். நோன்பு நோற்கக்கூடியவர்கள் முறைப்படி நோன்பு நோற்க வேண்டும்.


இந்திரா ஏகாதசி விரதத்தன்று, துளசி இலைகளை சமர்பிக்கலாம். 

இந்த நாளில் விஷ்ணுவை மட்டுமல்ல, அவரது மனைவியான அன்னை லட்சுமையையும் வணங்கினால் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெறலாம்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,