நாட்டியப் பேரொளி பத்மினி நினைவுநாளின்று

 நாட்டியப் பேரொளி பத்மினி நினைவுநாளின்று





🥲
கடந்த பல ஆண்டுகளாகவே சினிமாவுக்குள் நுழையும் நடிகர் நடிகைகளுக்கு ஆடத்தெரிந்திருக்கவேண்டும் என்கிற நிலை இல்லை. அவ்வளவு ஏன்... மொழி தெரிந்து பேசுகிறார்களா என்பது கூட முக்கியமில்லை. ஆனால், முன்னொருக் காலத்தில், ஒருவர் நடிக்க வருகிறாரென்றால், அவருக்கு ஆடத் தெரிந்திருக்க வேண்டும். அட்சரம் பிசகாமல் வசனம் பேசத் தெரிந்திருக்கவேண்டும். எல்லாவற்றையும் விட, நடிக்கத் தெரிந்திருக்கவேண்டும். அப்படி, ஆடி, பேசி, அற்புதமான நடிப்பையும் வழங்கியவர்களில், தனியிடம் பிடித்தவர்... பத்மினி. நாட்டியப் பேரொளி பத்மினி. ஆம்.. ‛சாதுர்யம் பேசாதேடி... என் சலங்கைக்கு பதில் சொல்லடி...’ எந்த சலங்கைக்கும் பதில் சொல்வார் பத்மினி. அதனால் தான் அவர் நாட்டிய பேரொளி. நடனம்... நடனம்... நடனம்... என வாழ்நாள் முழுவதையும் நடனத்திற்கு அர்ப்பணித்தவர். தமிழ் சினிமாவின் கிளாசிக் பக்கங்களில் பரதமும், பாவமும் நிறைந்த நடிகையாய் பத்மினிக்கு என்றும் இடம் உண்டு. திறமைக்கேற்ற அழகு, அழகுக்கேற்ற அறிவு என அனைத்திலும் தேர்ந்தவர். இன்று காலமான தினம். . மறைந்தாலும், படைப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பத்மினி போன்ற படைப்பாளிகள் என்றும் நினைவு கூறத்தக்கவர்கள். அந்த வரிசையில் இன்று பத்மினியை ரீவைண்ட் செய்கிறோம்.
இன்றைக்கு வடக்கில் இருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். ஆனால், அன்றைக்கு தென்னகத்தில், கேரளாவில் இருந்தும் ஆந்திரத்தில் இருந்தும் பல நடிகைகள், வந்து தமிழகத்தில் கொடி நாட்டினார்கள். அந்த வகையிலும், பத்மினி தனித்துவத்துடன் பட்டொளி வீசிப் பறக்கவிட்டார்.
கேரளாவின் சின்ன கிராமம்தான், பத்மினிக்கு பூர்வீகம். பத்மினியை பின்னாளில் தனித்துச் சொன்னார்கள். நாட்டியப் பேரொளி என்றார்கள். ஆனால் அவரின் பால்யத்தில், திருவாங்கூர் சகோதரிகள் என்றுதான் சொல்லுவார்கள். லலிதா, பத்மினி, ராகினி என மூன்று சகோதரிகளும் நடனத்திலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கினார்கள். இந்த மூவரிலும் உயர்ந்து நின்று முதலிடம் பிடித்தார் பத்மினி. இன்றுள்ள நடிகைகளுக்கு பிறக்கும் போது ஒரு பெயர். நாளடைவில் பிறக்கும் போது வைத்த ஒரிஜினல் பெயர் மறந்து, சினிமாவிற்காக வைத்த பெயரை தான் பலர் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், பத்மினி என்பது தான் அவரது பெற்றோர் அவருக்கு வைத்த ஒரிஜினல் பெயர். அதையே கடைசி வரை அவரும் பயன்படுத்தி வந்தார்
இந்திப் படத்தில் நடிக்கச் சென்று, அங்கே இங்கே நடிக்கத் தொடங்கி, தமிழில் வரிசையாக படங்களில் நடிக்கத் தொடங்கினார் பத்மினி. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என அந்தக்காலத்தின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த படங்களெல்லாம் சூப்பர் ஹிட்டு. எம்ஜிஆருடன் நடித்தாலும் சரி, சிவாஜியுடன் நடித்தாலும் சரி, எவருடன் நடித்தாலும் சரி... அந்தப் படத்தில் பத்மினி நடிக்கிறார் என்றால், அவரின் நடனத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பாட்டாவது வைத்துவிடுவார்கள். அதேபோல், பல காட்சிகள் க்ளோஸப் ஷாட்டுகளாக வைத்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், அவரின் நடிப்புக்குத் தீனி போடும்விதமாக, ரெண்டு காட்சியாவது இடம்பெற்றுவிடும்.
சிவாஜியுடன் நடித்த ‘தெய்வப்பிறவி’ மாதிரியான படங்களில் இருவருக்கும் நடிப்பில் போட்டியே இருக்கும். அதேபோல் எம்ஜிஆருடன் ‘ராணி சம்யுக்தா’, ‘மன்னாதி மன்னன்’ முதலான படங்களிலெல்லாம் இருவரில் யார் அழகு என்று ரசிகர்கள் பட்டிமன்றமே நடத்துவார்கள்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘சித்தி’ படம்தான் பத்மினியின் பிரமாண்டமான நடிப்புக்கு ஆகச்சிறந்த உதாரணம். எம்.ஆர்.ராதாவுக்கு மனைவியாக, அந்தக் குடும்பத்தை சரிசெய்யும் அன்னையாக, சிற்றன்னையாக தன் நடிப்பால் அசத்தியிருப்பார் பத்மினி.
‘சபாஷ் சரியான போட்டி’ எனும் வாசகம் மிகப்பிரபலம். ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில், பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் நடனமாடுவார்கள். அந்தப் போட்டி நடனத்தின் போது சொல்லப்படும் வசனம்தான்... ‘சபாஷ் சரியான போட்டி’.
எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு, கண்ணை மூடிக்கொண்டு, கற்பனையால் எழுதிய நாவல்தான் ‘தில்லானா மோகனாம்பாள்’. அந்நாவல் சினிமாவான பிறகு இந்த பத்மினி தில்லானா மோகனாம்பாள் மோகனாங்கியாகவே அறியப்பட்டார்.
ஆம்.. தமிழ் சினிமாவின் ‛ஆல் டைம் பேவரிட்’ மூவி என்கிற பட்டியல் இருந்தால், அதில் முதல் இடம் தில்லானா மோகனாம்பாள் தான். இன்று நமக்கு பல டிவி சேனல்கள் இருக்கிறது. அன்று பொதிகை என்கிற சேனல் இருக்கும் போது, தீபாவளிக்கு முதல் நாள், விடிய விடிய நேயர்களை விழிக்க வைக்க, ப்ளே செய்யப்படும் ஒரே மூவி, ‛தில்லானா மோகனாம்பாள்’. சலிப்பு தட்டாத திரைக்கதையும், கதாபாத்திரமும் கொண்ட முழு நீள காதல், நகைச்சுவை திரைப்படம். படத்தின் பெயரிலேயே தெரியும்... பெண்ணை சுற்றிய கதை என்பது. மோகனாம்பாள் என்கிற நாட்டிய பெண்ணை மையமாக கொண்ட கதை. சிவாஜியும்-பத்மினியும் சிக்கல் சண்முகசுந்தரம்-மோகனாங்கியாக வாழ்ந்திருப்பார்கள். நாளடைவில் வந்த கரகாட்டகாரன், சங்கமம் போன்ற படங்கள் எல்லாம் தில்லான மோகனாம்பாளின் 2.0, 3.0 என்றால், அது மிகையாகாது. பத்மினி என்கிற பெயரையே பலர் மறந்து, மோகனாங்கியாக தான் பத்மினி பின்னர் அறியப்பட்டார். பத்மினியை மறந்தால் கூட, மோகனாங்கியை மறக்காது தமிழ் சினிமா
‘இரு மலர்கள்’ படத்தில், ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற பாடலில், சிவாஜியும் பத்மினியும் அப்படியொரு சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார்கள். சில இடங்களில், பத்மினியின் எக்ஸ்பிரஷன்கள், நம் மனங்களைக் கொள்ளையடித்துவிடும்.
சாவித்திரி மாமி. ‘வியட்நாம் வீடு’ குடும்பத்தலைவி. நாயகி. மூக்குத்தி டாலடிக்க, மடிசார் புடவையும் பிராமண பாஷையும் கொஞ்சம் புத்திசாலித்தனமும் நிறைய்ய வெகுளித்தனமுமாக வெளுத்து வாங்கியிருப்பார் பத்மினி. ‘சாவித்ரி... சாவித்ரீ...’ எனறு பிரஸ்டீஜ் பத்மநாபனாக சிவாஜி அழைப்பதும் அதற்கு ‘என்னண்ணா.. சொல்லுங்கோண்ணா’ என்று குழைந்துக் கொஞ்சுவதும்... ஆஹா... இருவரையும் மனசுக்குள் நிற்க வைத்து, திருஷ்டி சுற்றிப் போட்டார்கள் ரசிகர்கள்.
இயக்குநர் பாசில், ‘பூவே பூச்சூடவா’ படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார். அந்தப்படத்துக்கு பக்கபலமாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் இளையராஜா. கேரக்டர்களின் உணர்வுகளை, இசை வழியே ரசிகர்களுக்குக் கடத்தியிருப்பார். இன்னொருவர் பப்பிம்மா (பத்மினி). அந்தப் பாட்டி கதாபாத்திரத்தை, பூங்காவனத்தம்மாள் எனும் கேரக்டரை, அவ்வளவு அழகாக, லைவாக வாழ்ந்திருப்பார்’ என்கிறார் இயக்குநர் பாசில்.
பண்பட்ட நடிப்பும் ஆபாசமில்லாத நடனமும்தான் பத்மினியின் அடையாளம். கால்கள் ஆடும். கண்கள் பேசும். கைகள் அபிநயம் பிடித்து அதுவொரு பாஷைபேசும். பப்பிம்மா என்றும் பத்மினி என்றும் நாட்டியப்பேரொளி என்றும் எல்லோரும் கொண்டாடிய அந்த மகோன்னதமான நடிகை, இன்றைக்கு இல்லை. கடந்த 2006ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24ம் தேதி இறந்தார்.
ஆனாலும் இன்னும் நூறாயிரம் ஆண்டுகளானாலும் பத்மினியின் புகழை, ரசிகர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இன்னும் பல நூறு ஆண்டுகள் கழித்து, யார் வீட்டிலாவது, எந்தச் சிறுமியாவது, ‘நான் டான்ஸ் கத்துக்கணும்பா’ என்று சொன்னால், ‘அப்படியா, பத்மினி மாதிரி வரப்போறியா’ என்று அப்போதும் கேட்கத்தான் போகிறார்கள்.
ஏனெனில்... பத்மினி வரம் பெற்ற நடிகை. சாகா வரம் பெற்ற கலையரசி.
இன்று செப்டம்பர் 24ம் தேதி, அந்த நாட்டியப்பேரொளி பத்மினி நினைவு நாள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,