என்றென்றும் அன்புடன்

 


பாலகுமாரன் தன்னுடைய தொடர்கதையை தாய் வார இதழில் எழுத வேண்டும் நினைத்து வலம்புரிஜானிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார்.

ஆசிரியர் குமார் என்கிற உதவியாளரை அழைத்து என்னை கூப்பிட்டு வரச் சொன்னார். நான் போய் எதிரில் நின்றேன்.
“ராசி, இவர்தான் பாலகுமாரன். நம்முடைய தாய் வார இதழில் கதை எழுதப் போகிறார். அந்தக் கதையை கேட்டுவிட்டு நீங்கள் பதில் சொல்லுங்கள்“ என்று சொன்னார்.
ஆசிரியர் முடிவெடுத்துவிட்டால் நேரடியாக தொடர் வெளி வந்து விடும். ஆனால் ஆசிரியர் அப்படிச் செய்யவில்லை. சிறுகதையையும் தொடரையும் பார்த்துக் கொள்கிற பொறுப்பு எனக்கு அப்போது தந்திருப்பதால் நீங்கள் கேளுங்கள் என்று சொன்னார்.
அது அவரின் பெருந்தன்மை.
நான் பாலகுமாரன் கதையைக் கேட்டேன். அவர் மிகச்சிறப்பாக ஒரு கதையைச் சொன்னார்.
ஆனால், அந்தக் கதையை அனுமதிக்க வேண்டாம் என்று கருதினேன். எனவே இது வேண்டாம் வேறு ஒரு கதையை நீங்கள் சொல்லுங்கள் என்று சொன்னேன்.
பாலகுமாரன் திடுக்கிட்டு ஏன் இந்தக் கதைக்கு என்ன? என்று கேட்டார்.
நான் உடனடியாக சொன்னேன், “இது உங்கள் சொந்தக் கதையாக இருப்பது போல் தெரிகிறது. நீங்கள் இதை டைரியில் வேண்டுமானால் எழுதலாம். ஆனால் பல லட்சம் வாசகர்கள் படிக்கிற ஒரு கதையில் நேர்த்தியான ஒரு அறம் இருக்க வேண்டும்” என்று எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.
இப்போது அதை நினைத்துப் பார்த்தால் தவறாகக் கூட இருக்கலாம் அல்லது சரியாகவும் இருக்கலாம்.
காரணம் நான் ஜெயகாந்தன், விந்தன், புதுமைப்பித்தன் போன்றோரின் கதைகளைப் பின்பற்றி படித்த வாசகர் என்பதால், வாசகர்களுக்கு சரியான சமூகக் கதைகளைக் கொடுக்க வேண்டும் என்று கருதினேன்.
இதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.
பாலகுமாரன் திறமை வாய்ந்தவர் என்பதால் அவரிடம் நல்ல கதையை வாங்கி விட வேண்டும் என்றும் கருதிதான் அந்தக் கதையை மறுத்தேன்.
‘மெர்குரிப் பூக்கள்’ நாவலில் தொழிற்சங்கப் பிரச்சனை, கூலி உயர்வு, சிவப்பு சிந்தனை மேம்பட எழுதியிருப்பார்.
கணேசன் என்கிற கதாபாத்திரம் இன்னும் மறக்கமுடியாது. அப்பேர்பட்ட பாலகுமாரன் இரண்டு பெண்களை மையப்படுத்திய ஆணின் கதையைச் சொல்கிறாரே என்பதுதான்.
பாலகுமாரன் அப்போது இளைஞர்கள் எதிர்பார்த்திருக்கிற ஒரு இலக்கிய எழுத்தாளராக திகழ்ந்தார்.
பாலகுமாரன் நான் சொன்னதை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. உடனே ஆசிரியர் அறைக்குச் சென்று அமர்ந்தார்.
என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் ஆசிரியர் என்னை அறைக்குள் அழைத்து ஒரு காகிதத்தில் “என்றென்றும் அன்புடன் – பாலகுமாரன்“ என்று எழுதி என்னிடம் தந்து, அடுத்த வாரமே இந்தத் தொடர்கதை வரவேண்டும் என்று நீங்கள் அறிவித்து விடுங்கள் என்று சொன்னார்.
நான் தயங்கினேன்.
“ராசி நாம் நினைப்பது எல்லாமே வந்துவிட வேண்டும் என்று கருதாதீர்கள். எழுத்தாளன் சமூகத்திற்கு தான் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கிறானோ, அதைத் தடையின்றி சொல்வது எழுத்தாளருடைய உரிமை. நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
இது இன்னொரு மாதிரியான புரிதல் என்பதை உணர்ந்து நான் அமைதியானேன்.
பிற்காலத்தில் இந்த முரண்பட்ட அனுபவமே பாலகுமாரன் அவர்களிம் என்னை நெருக்கமாக நட்பாக பழக வைத்தது என்று சொல்லலாம்.
பிறகு, ‘என்றென்றும் அன்புடன்’ வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.
பாலகுமாரனை உற்றுப் பார்த்து நான் ஒன்று தெரிந்து கொண்டேன்.
வாழ்வியலில் பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்கிற அற்புதக் கலையை, மனசுக்குள் பேசும் ஒரு மொழியை பாலகுமாரன் கைவரப் பெற்றிருந்தார் என்பதை ஆச்சரியமாக பார்த்தேன்.
அதன்பிறகு, அவர் பின்னால் வண்டியிலும், பேருந்திலும், காரிலும் பேசிக்கொண்டே பயணப்பட்ட சம்பவங்கள் நிறைய.
ராணிமேரி கல்லூரிக்கு ஒரு முறை பாலகுமாரனை அழைத்துச் சென்றேன்.
அப்போது வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நீண்ட இடைவெளி இருந்தது.
எழுத்தாளர்களை நேரடியாக அமர வைத்து அவர்களின் மனநிலையை புரியவைக்க வேண்டும் என்று கருதினேன். அதுதான் இந்த ராணி மேரி கல்லூரிக்கு கொண்டு சென்ற கதை.
அதில் ஒரு வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்தது.
ஜெயகாந்தனைப் போலத்தான் பாலகுமாரன் கம்பீரமாக அமர்ந்துகொண்டு மாணவிகளைப் பார்த்து “நான் புகைப் பிடிப்பது வழக்கம். நான் பிடிக்கலாமா?” என்று கேட்டார்.
மாணவி ஒருவர் எழுந்து பிடிக்கக் கூடாது என்றார்.
அதனாலென்ன உங்கள் விருப்பம் உங்களுக்கு, என் விருப்பம் எனக்கு எனச் சொல்லி ஒரு இழு இழுத்தார். எல்லோரும் அவரையே பார்த்தார்கள்.
பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அதை கீழே போட்டுவிட்டு, “உங்களுக்கு வேண்டாம் என்றால் விட்டு விடுகிறேன்” என்று அவர் பேசி அந்த அரங்கை தன் கட்டுக்குள் கொண்டுவந்தது ஆச்சரியமான சம்பவம்.
- ராசி அழகப்பன்

நன்றி: தாய்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,