*நோயாளிக்கு ஜூஸ் செலுத்திய மருத்துவமனையை இடிக்க உத்தரவு*
*
நோயாளிக்கு ஜூஸ் செலுத்திய மருத்துவமனையை இடிக்க உத்தரவு*
பிரயாக்ராஜ்-உத்தர பிரதேசத்தில் டெங்கு நோயாளிக்கு ரத்த தட்டணுக்களுக்குப் பதிலாக சாத்துக்குடி 'ஜூஸ்' செலுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்ட தனியார் மருத்துவமனை கட்டடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரயாக்ராஜைச் சேர்ந்த பிரதீப் பாண்டே என்பவருக்கு கடந்த வாரம் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இவர், அங்குள்ள குளோபல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு ரத்த தட்டணுக்கள் செலுத்த பரிந்துரை செய்தனர். அதை செலுத்திய பின், பாண்டே உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.
இதையடுத்து, அவரை வேறு தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ரத்த தட்டணுக்களுக்குப் பதிலாக பழச்சாறு செலுத்தப்பட்டு உள்ளது என அறிக்கை அளித்தனர். இந்நிலையில், -பாண்டே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தையடுத்து, குளோபல் மருத்துவமனைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அங்குள்ள ரத்த வங்கியில் இருந்த ரத்த தட்டணு பாக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்ப கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையும் துவக்கப்பட்டது.
இந்நிலையில், பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் காத்ரி கூறியதாவது:குளோபல் மருத்துவமனையில் செலுத்தப்பட்டது பழச்சாறு அல்ல. அந்த மருத்துவமனை ரத்த தட்டணுக்களை சரியாக பராமரிக்கவில்லை. இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மருத்துவ துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த மருத்துவமனை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதால், கட்டடத்தை இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
*
Comments