கோடீஸ்வரர்களாக மாற்றும் குபேர ஆலயங்கள்!

 


கோடீஸ்வரர்களாக மாற்றும் குபேர ஆலயங்கள்!
*


சென்னை வண்டலூரில் இந்தியாவிலேயே லட்சுமி குபேரனுக்கு என்று தனிக் கோயில் உள்ளது. தினமும் காலை 5.30 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் இறைவனை தரிசிக்கலாம். குபேரன், சிரித்த முகத்துடன், அன்னை லட்சுமி, துணைவியார் சித்தரிணியுடன் இங்கு காட்சி அளிக்கிறார். குபேரன் சன்னதியை அடுத்து லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்களுக்கு என தனித்தனி பிராகாரங்களும் உள்ளன. இங்கு ஒரு கோசாலையும் பராமரிக்கப்பட்டு வருகிறது.


பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் என்பதால், பசுக்களுக்கு பழங்கள் அளித்தால். குபேரனுக்கு செய்யும் பூஜையாகவே கருதப்படுகிறது. செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும். அதேபோல திருப்பதிக்கு செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரன் கோயிலுக்குச் சென்று லட்சுமி குபேரனை வழிபட்டுச் செல்வதும் மிகுந்த விசேஷமாகும். தீபாவளி தினத்தன்று குபேர பூஜையை முன்னிட்டு இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. செல்வத்தை அள்ளி வழங்கும் குபேர தலம் குறித்து அறிந்து கொள்வோம்.


மதுரை வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்துள்ளது திருவாப்புடையார் கோயில். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாகவும் திகழ்கிறது. சகல செல்வத்திற்கும் அதிபதியாக வேண்டுமென புண்ணிய சேனன் விரும்பினான். அகத்தியரின் பாதத்தை வணங்கியவனுக்கு திருவாப்புடையாரில் உள்ள ஈசனை நோக்கி தவம் புரியச் சொன்னார். அவனின் தவம் பலித்தது. ஆனால் அகங்காரம் பெருகியது. பல தவறுகளை செய்தவனின் ஒரு கண்ணை ஈசன் பறித்தார். மீண்டும் தவம் செய்தான். ஈசனும் அவனை மன்னித்து இன்றிலிருந்து உன் பெயர் குபேரன். நீயே சகல செல்வங்களுக்கும் அதிபதி என்றார். இதுவே குபேரன் உற்பவித்த தலமாகும். நாமும் குபேரன் தோன்றிய தலத்திற்குச் சென்று திருவாப்புடையாரை தரிசித்து வளம் பெறுவோம்.


சிறந்த சிவபக்தனான குபேரன் ஒன்பது வகையான நவநிதிகளுக்கும், எண்ணிலடங்கா பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி தனது அழகாபுரியை ஆண்டான். இதனால் கர்வத்தோடு அலைந்தவன் ஒருநாள் கயிலாயத்திற்கு வந்தான். ஈசன் உமையோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். உலகாளும் அன்னையென்று பாராமல் அழகை ரசித்தவனின் மனதை அறிந்த உமையன்னை சினம் கொண்டாள். ‘உன் உருவம் விகாரமடைந்து, உன்னிடமுள்ள நவநிதிகளும் உன்னைவிட்டு விலகும்’ என்று சபித்தாள். குபேரனை விட்டு விலகிய நவநிதிகள், பெருமாளிடம் தஞ்சமடைந்தன. அதனாலேயே அவருக்கு வைத்தமாநிதிப் பெருமாள் எனும் திருநாமம் உண்டாயிற்று.


தன் தவறை உணர்ந்த குபேரன், பரமசிவன் மற்றும் உமையின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினான். பார்வதி தேவியோ, ‘நான் உன்னை சபித்தவாறே உன் மேனியின் விகாரம் மறையாது. ஒரு கண்ணும் தெரியாது. ஆனால், நீ இழந்த பெருஞ் செல்வங்களான நவநிதிகளும் தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள தர்மபிசுன க்ஷேத்ரத்திலுள்ள (இன்றைய திருக்கோளூர்) திருமாலிடம் தஞ்சமடைந்துள்ளன,’ என்றார். திருக்கோளூர் வந்தவன் பெருமாளைக் குறித்து பெருந்தவம் புரிந்தான்.


மனமிரங்கிய திருமால், குபேரனை மன்னித்து நவநிதிகளைத் தந்தருளினார். இன்றும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், செல்வங்கள் பெருகவும் வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி சகல சம்பந்துமிக்க வாழ்க்கையைப் பெறுகின்றனர். இங்கு தீர்த்தமே குபேர தீர்த்தம்தான். நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் இதுவொன்றாகும். இத்தலம் நெல்லைக்கு அருகே உள்ளது.

அருணாசல மலையை கிரிவலமாக வரும்போது குபேர லிங்கத்தை தரிசிக்கலாம். இங்கு இது ஏழாவது லிங்கமாக விளங்குகிறது. இது குபேரனால் வழிபடப்பட்ட லிங்கமாகும். எனவே, பொருளாதாரத்தில் குன்றி இருப்போர் இந்த லிங்கத்தை வழிபட செல்வ வளம் பெருகும்.


திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் நுழைந்ததும் எதிரே குபேர லிங்க கோயிலை காணலாம். இந்த லிங்கம் மகாலட்சுமியிடமிருந்து குபேரன் தவமிருந்து பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. தன்னிடமிருக்கும் சங்கநிதி, பதுமநிதிகள் நீங்காதிருக்க ஈசனை நோக்கி குபேரன் தவமிருந்தான். ஈசனோ, ‘உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருக்க மகாலட்சுமி அருள வேண்டும்’ என்று சொல்லி மறைந்தார்.



குபேரன் மகாலட்சுமியை நோக்கி தவமிருக்க திருமகளின் திருக்கரத்தால் சுயம்பு லிங்கத்தை பெற்று இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இன்றும் குபேர லிங்கத்தினை சுக்கிர ஹோரையில், அர்ச்சித்து வெண் பட்டாடை சமர்பித்து வழிபட வறுமை நீங்கி செல்வம் பெருகும்.எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் குபேரன் இலங்கையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தான். ராவணனால் தன் நாடு, நகரம், புஷ்பக விமானம் எல்லாம் இழந்து வடதிசை நோக்கி வந்து, சசிவனம் என்னும் வன்னிக்காட்டுப் பகுதிக்கு வந்தான். சுயம்புவாக தோன்றிய அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கி, தொண்டு செய்து வந்தான்.


அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், குபேரனுக்கு உமாதேவியுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார். சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளும் தந்து அருள்புரிந்தார். இதனால் இந்த தலம் ஸித்தி தரும் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஈசனிடம் வரங்கள் பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கினான். இந்த தலத்தில் வழிபடும் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் தந்து அருளுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டான். இக்கோயிலில் குபேரன், குபேர மகாலட்சுமி ஆகியோர் தனிச் சந்நதியில் அருளுகின்றனர். தீபாவளியன்று நடைபெறும் மஹா குபேர ஹோமம் மிகவும் பிரசித்தி பெற்றது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தஞ்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.


செட்டிகுளம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தது. சோழனும், பாண்டியனும் சேர்ந்து கட்டிய திருக்கோயிலாகும். இறைவன் ஏகாம்பரேஸ்வரர் எனவும், இறைவி காமாட்சி அம்மை என்கிற திருப்பெயரோடும் அருள் பாலிக்கின்றனர். பொதுவாக ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கே, கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என மொத்தம் 12 ராசிகளுக்காக குபேரன் சிற்ப வடிவில் காட்சி தருகிறார்.


12 ராசியினருக்கு அருள் பாலிக்கும் குபேரனை வணங்கி, செல்வச் செழிப்பு பெறலாம். வேண்டுதல் நிறைவேறியதும், குறிப்பிட்ட குபேரனுக்கு ‘குபேர ஹோமம்’ நடத்துவது ஐதீகம். 12 குபேரர்கள் தவிர, மகா குபேரனின் சிற்பமொன்றும் ஆலய கோபுரத்தின் உட்புறம் வடக்குத் திசையில் உள்ளது. திருச்சி, துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.


சந்திரகுப்தன் எனும் வைசியன் தன்னிடமிருந்த சகல செல்வங்களையும் இழந்தான். மனம் நொந்து திசை தேசம் தெரியாது ஈசனருளால், கீவளூர் தலத்தை அடைந்து, நந்தியெம்பெருமானின் காலடியில் வீழ்ந்தான். கோயிலை வலம் வந்தவனை, ஈசன் கருணைக் கண்களால் கண்டார். இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனை, வைசியனுக்கு அடையாளம் காட்டினார். தனிச் சந்நதியில் அருளும் குபேரனை வணங்கி வைசியன் பெருஞ் செல்வம் பெற்றான். இத்தலம் நாகப்பட்டிணம் - திருவாரூர் பாதையில் அமைந்துள்ளது.


ராவணன் குபேரனோடு போரிட்டு குபேரனுடைய நிதிக் கலசங்களை எடுத்துச் சென்றான். இதனால் குபேரன் தன்னுடைய குபேர ஸ்தானத்தை இழந்தான். தேவபுரீஸ்வரரை குபேரன் செந்தாமரை புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான். ஈசனின் அருளால் ராவணனிடமிருந்து குபேர கலசங்களை திரும்ப பெற்று மீண்டும் குபேர பட்டத்தை பெற்றான்.


பெரும் பணக்காரர்களாக இருந்து மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டோர்கள் இத்தல நாயகரான தேவபுரீஸ்வரரையும், அம்மையான மதுரபாஷினியையும் வழிபட, செல்வச் செழிப்போடு வாழ்வர் என்பது உறுதி. திருவாரூர் - நாகப்பட்டிணம் சாலையிலுள்ள கீவளூர் எனும் தலத்திற்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தின் பூமிக்கடியில் சிவபெருமான் இருப்பதாக ஐதீகம். எனவேதான் திருஞானசம்பந்தர் இத்தலத்தை அங்கப் பிரதட்சணமாக சுற்றிச் சென்றார். குபேரன் வழிபட்டு பேறு பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. கும்பகோணம் - திருவாரூர் பாதையிலுள்ள சாக்கோட்டையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.


தொகுப்பு: மகி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,