நந்தபிரயாகை பரமபுருஷன் கோயில்*

 108 வைணவ திவ்ய தேச உலா - 67 | நந்தபிரயாகை பரமபுருஷன் கோயில்*





108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தராகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டம் நந்தபிரயாகை பரமபுருஷன் கோயில், 67-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் நந்நாகினி, அலக்நந்தா ஆறுகள் சங்கமிக்கின்றன.

பனி படர்ந்த மலைகளுக்காக நந்தபிரயாகை புகழ்பெற்ற இடமாகும். அலக்நந்தா நதிக்கரையில் உள்ள கோபால்ஜி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பிரிதி, ஜோதிமட் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

ஜோஷி மடம் இமயமலையில் 6,150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சிப் பகுதியாகும். இந்தியாவில் ஆதிசங்கரர் நிறுவிய 4 மடங்களில் ஜோஷி மடமும் ஒன்று. அதர்வண வேதத்தை நிர்வகிக்கும்படியாக இந்த மடம் நிறுவப்பட்டுள்ளது. பத்ரிநாத் கோயில், குரு கோவிந்த் கோயில், பூக்கள் பள்ளத்தாக்கு (தேசிய பூங்கா) பகுதிகளுக்கு ஜோஷி மடம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.இந்த இடத்தில் இருந்துதான் முதன்முதலில் தனது பயணத்தை, அவர் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. திருமாலை ராமபிரானாக, கிருஷ்ணராக, 1,000 தலைகள் கொண்ட பாம்பின் மீது சயனம் கொண்டிருக்கும் பரமனாகப் போற்றிப் பாடியுள்ளார்.

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து

அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள்

ஆலி மா முகில் அதிர்தர அரு வரை அகரூ உற முகடூ ஏறி

பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே. 958

மூலவர்: பரம புருஷன்

தாயார்: பரிமள வல்லி நாச்சியார்

விமானம்: கோவர்த்தன விமானம்

தீர்த்தம்: இந்திர, கோவர்த்தன தீர்த்தம், மானஸ் சரோவரம் ஏரி

கோயில் அமைப்பும் சிறப்பும்

கோவர்த்தன விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் பரமபுருஷ பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். பத்ரீகாஸ்ரமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள திவ்ய தேசமாக உள்ளது. இங்கு அமர்ந்த கோலத்தில் நரசிம்மப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

காண வேண்டிய இடங்கள்

நரசிம்மர் கோயில் - பனிக்காலத்தில் பத்ரிநாத் கோயில் மூடப்படும் சமயத்தில் அங்குள்ள தெய்வச் சிலைகள், இங்குள்ள நரசிம்மர் கோயிலுக்குள் வைத்து வழிபடப்படும்.

தபோவனம் - ஜோஷி மடத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் தபோவனம் உள்ளது. இங்கு இயற்கையாகவே வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது. அருகிலேயே தௌலி (கங்கை ஆறு) இவ்விடத்தைக் கடக்கிறது.

பவானி கோயில் - ஜோஷி மடத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

பத்ரிநாத் கோயில் - ஜோஷி மடத்தில் 44 கிமீ தொலைவில் பத்ரிநாத் (கிருஷ்ணர்) கோயில் உள்ளது.

திருப்பிரிதி

ஜோஷிமட் என்ற இடம்தான் தற்போது திருப்பிரீதி என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பக்தர்கள் மீது பெருமாளுக்கு இருக்கும் அன்பைக் குறிக்கும் ‘பிரீதி’ என்ற சொல்லில் இருந்து இந்தத் தலம் பெயர் பெற்றது.

ஆதிசங்கரர் ஜோதிஷ மடத்தில் திவ்யஞானம் பெற்று சங்கரபாஷ்யம் அருளினார், மேலும் இத்தலத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் மேற்கொண்ட பிறகு பிரம்மசூத்திரத்துக்கு பாஷ்யம் (உரை) எழுதினார் என்று கூறப்படுகிறது. தற்போது ஆதிசங்கரரால் கட்டப்பட்ட நரசிங்க பெருமாள் கோயிலும், நின்ற கோலத்தில் இருக்கும் நாராயணர் கோயிலும் மட்டுமே இங்கு உள்ளன.

எப்போதும் சுற்றுலாப் பணிகளின் வருகை இருந்துகொண்டே இருக்கிறது. வரும் பக்தர்கள் பெருமாளுக்கு ஏலக்காய் மாலை அணிந்து வழிபாடு செய்வது வழக்கம். திருப்பிரிதி பெருமாளை சேவித்தவர்களுக்கும், அவர் மீது பாடப்பட்ட பாடல்களைப் பாடுபவர்களுக்கும், அதைக் கேட்பவர்களுக்கும் எந்த தீயவினைகளும் சேராது என்று திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து வசதி

ஜோஷி மடத்துக்கு 293 கிமீ தொலைவில் உள்ள விமான நிலையம் டேராடூனில் உள்ளது. அரித்வார் அருகே உள்ள ரிஷிகேஷில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 58 ஜோஷி மடம், புதுதில்லி, இந்திய திபெத் எல்லைகளை சாலை வழியாக இணைக்கிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,