இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளரான க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam)

 தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளரான க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) காலமான தினமின்று

* திருவாரூர் மாவட்டம் வலங்கை மானில் (1912) பிறந்தவர். தந்தை அஞ்சல் துறை அதிகாரி. சிறுவயதிலேயே தாயை இழந்த வர், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். இளம் வயதிலேயே ஏராளமான ஆங்கிலப் படைப்பு களைப் படித்தார்.
* எழுத்தாளராக வேண்டும் என்று இளம் வயதிலேயே தீர்மானித்தார். சென்னைக்கு வந்து சேர்ந்த பிறகு, முதலில் ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் புதுக்கவிதை, நாவல், சிறுகதை, விமர்சன நூல், மொழிபெயர்ப்பு என்று இவரது இலக்கியக் களம் விரிந்தாலும் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவந்தார்.
* தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி நன்கு அறிந்திருந்தார். உலக இலக்கியத்துக்கு இணையாகத் தமிழ் இலக்கியம் பேசப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். தமிழின் சிறந்த படைப்புகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கியத்துக்கு வளம்சேர்க்கும் விதமாக, உலகப் புகழ்பெற்ற சிறந்த படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
* மயன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் எழுதினார். ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’, ‘எழுத்து’ உள்ளிட்ட இதழ்கள், ‘ராமபாணம்’, ‘இலக்கிய வட்டம்’, ‘முன்றில்’ உள்ளிட்ட சிற்றிதழ்களை நடத்தினார். தினமும் 7 பக்கங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் சுமார் 15,000 கட்டுரைகள் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.
* அன்றைய காலகட்டத்தின் முக்கியத் தேவையான இலக்கிய விமர்சனத்தில் கவனம் செலுத்தினார். ‘சுதேசமித்திரன்’ இதழில் 1955-ல் சிறுகதை வளர்ச்சி குறித்த கட்டுரை எழுதினார். அதன் பிறகு, ஒரு விமர்சகராகவும் தீவிரமாக இயங்கினார்.
* தமிழில் அதிக எண்ணிக்கையில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர் என குறிப்பிடப்பட்டார். தமிழின் சிறந்த இலக்கியப் படைப்புகளை மீண்டும் மீண்டும் தன் இதழ்களில் குறிப்பிட்டு, வாசகர்களிடையே அவற்றைக் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர்.
* நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், விமர்சனக் கலை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைகள் என இவரது படைப்புலகம் விரிகிறது. இவரது ‘பொய்த்தேவு’ நாவல் இலக்கிய உலகில் இவருக்குத் தனி இடத்தைப் பெற்றுத் தந்தது.
* தான் வாழ்ந்துவந்த காலத்தின் போக்கு, எழுத்தின் வகைகள், நண்பர்கள், சங்ககால, தற்கால படைப்பாளிகள் முதலானவை குறித்து எழுதினார். சமரசம் செய்துகொள்ளாத விமர்சகரான இவர், உள்ளுணர்வின் உந்துதல்கள் அடிப்படையிலேயே செயல்பட்டார். இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்கக்கூடியவர். சலிக்காத செயல்வேகம் கொண்டவர்.
* பல பிரபல இதழ்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. 1986-ல் இவர் எழுதிய ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவரைப் பற்றி ‘க.நா.சு.வின் இலக்கிய வட்டம்’ உள்ளிட்ட நூல்கள் வெளிவந்தன. இவரது நூல்களை தமிழக அரசு 2006-ம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.
* இறுதி மூச்சுவரை முழு நேர எழுத்தாளராகவே செயல்பட்டவர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வளமான பரப்பை வடிவமைத்தவர்களில் முதன்மையானவராக விளங்கினார். வாசகர்களாலும் இலக்கிய வட்டாரத்திலும் ‘க.நா.சு’ என அன்போடு அழைக்கப்பட்ட க.நா.சுப்ரமணியம் 76-வது வயதில் இதே டிசம்பர் 18 (1988) மறைந்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,