ஆருத்ரா [திருவாதிரை] தரிசனம்

 ஆருத்ரா [திருவாதிரை] தரிசனம் 



  ஆருத்ரா தரிசனத்தை 


 மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளே "திருவாதிரை" திருவிழா "ஆருத்ரா தரிசனம்" திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.


ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் "ஆதிரை" என்று அழைக்கப்படுகிறது. அதோடு திரு என்ற அடைமொழி சேர்த்து "திருவாதிரை" என்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.


 திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆனந்தத் திருநாளில் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானை சிதம்பரத்திற்குச் சென்று தரிசிப்பது முக்தியைத் தரும்.


 சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் "திருவாதிரை".


பதஞ்சலி - வியாக்ரபாதர் :-


 பாற்கடலில் பள்ளிகொண்ட பரமபதநாதனாம் ஸ்ரீமஹா விஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். 


 இதைக் கண்ட ஆதிசேஷன் தங்களது ஆனந்தத்திற்குக் காரணம் என்ன? 


என்று கேட்க, ஸ்ரீ மந் நாராயணரோ ஆடல்வல்லான் சிவபெருமான் திருவாதிரை நாளன்று நடராஜராக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்கு காரணம் என்றார்.


 ஸ்ரீமந் நாராயணரையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண ஆதிசேஷனுக்கு ஆவல் அதிகமாகியது. 


தன்னுடைய ஆசையை பரமபதநாதனிடம் சொல்ல, அவரோ ஆதிசேஷனுக்கு ஆசி அளித்து அனுப்பினார்.


பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார் "ஆதிசேஷன்". 


ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் உருக்கொண்டு பூலோகத்தில் தவம் இருந்தார். 


பல ஆண்டுகளாகத் தவம் செய்து, தவம் நிறைவு பெறும் காலம் வந்தது.


 இவ்வாறு தவம் செய்து கொண்டிருக்கையில் பதஞ்சலி முனிவர் முன்பு சிவபெருமான் தோன்றி திருக்காட்சி அளித்தார். 


அவரை நமஸ்காரம் செய்து வணங்கினார் பதஞ்சலி முனிவர். 


ன சிவபெருமான் அவரிடம் நீ என்னைத் தவம் செய்த நோக்கம் போலவே, வியாக்ரபாதரும் என்னை நோக்கித் தவம் செய்து காத்துக் கொண்டிருக்கிறார்.


நீங்கள் இருவரும் தில்லை வருவீர்களாக!. 


 உங்களுக்கு யாம் திருத்தாண்டவ திருக்காட்சியைக் காட்டி அருளுவோம் என்று கூறிவிட்டு மறைந்தார்.


 பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர் இருவரும் சிதம்பரம் - தில்லை நடராஜர் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.


 இந்த உலகமானது நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்புகளால் ஆனது. 


 அவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது சிவபெருமானின் ஆனந்த நடனம் தான்.


 இறைவன் அசைவதால் தான் உலகமே அசைகிறது. "நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே" என்பதைப்போல் சிவபெருமானின் நடனம் தான் உலகை வாழ்விக்கிறது. 


 நடராஜரின் நடனம் மட்டும் மொத்தம் - 108. 


 இதில் சிவபெருமான் மட்டும் தனித்து ஆடியது - 48.


அங்கு இரண்டு முனிவர்களும் சிவபெருமானின் நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். 


 மார்கழி திருவாதிரையான அன்று  ஆடல்வல்லான் நடராஜரின் தரிசனத்தைக் கண்டால் தீராத நோய்களும், பாவங்களும் விலகும். 


தில்லையில் சிவபெருமானின் நடனத்தைப் பார்க்க முக்தி கிடைக்கும்.


 சேந்தானார் வரலாறு :-


சேந்தனார் என்பவர் ஒரு விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு ஊரில் வாழ்ந்து வந்தார். 


 அவர் சிறந்த சிவபக்தர். 


தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளித்துவிட்டு பிறது தான் உண்ணுவது சேந்தானாரின் கடமையாக இருந்தது.


 சேந்தனாரின் பக்தியை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.


 ஒருநாள் மழைபெய்தது. அதனால் விறகு விற்கமுடியவில்லை. 


 விறகு விற்றால் தான் அரிசி வாங்குவதற்குப் பணம் கிடைக்கும். எனவே, அவரால் அன்று சமையல் சமைக்க முடியவில்லை.


 மாறாக அரிசியைப் பொடித்து மாவாக்கி, அதில் களி செய்து சிவனடியார் யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். 


 ஆனால், யாரும் தென்படவில்லை. மனம் நொந்தவரின் வீட்டில் சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு சேந்தனாரின் வீட்டிற்குச் சென்றார்.


சேந்தனாரிடம் உண்ண ஏதாவது இருக்கிறதா? 


என்று கேட்டார். 


 அவரோ அகமகிழ்ந்து களியை அவருக்கு அன்போடு அளித்தார். 


அதை அன்போடு மனமகிழ்ந்து ஏற்றுக் கொண்டார் "சிவபெருமான்". 


 எஞ்சியிருந்த களியை எனக்கு அடுத்த வேளை உணவிற்குத் தருவாயா? 


என்று சேந்தனாரிடம் கேட்டு வாங்கிக் கொண்டார் "


சிவனடியார் வேடத்தில் வந்தது சிவபெருமான்". 


 அன்று இரவில் சிதம்பரத்திலுள்ள அரசனின் கனவில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். 


 சேந்தனார் என்ற பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்டு, தான் சேந்தனார் வீட்டில் களி உண்ட செய்தியைக் கூறினார்.


 சிதம்பரம் :-


மறுநாள் அதிகாலை வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் திருக்கோவிலின் கருவறையைத் திறந்தார்கள். 


 அப்போது எம்பிரானைச் சுற்றி களிச்சிதறல்கள் இருப்பதைக் கண்டார்கள். 


இது என்ன அதிசயம் என்று வியந்தார்கள்.


உடனே, அரசருக்குச் செய்தியைத் தெரிவித்தார்கள். 


இதைக் கேட்ட அரசன் நேற்றிரவு தான் கண்ட கனவை நினைத்து மகிழ்ந்தான்


 அப்போது சிதம்பரத்தில் தேர்த்திருவிழா நடந்து கொண்டிருந்தது. 


அரசன் உட்பட அனைவரும் அங்கு இருந்தார்கள். 


சேந்தனாரும் அந்த தேர்த் திருவிழாவிற்கு வந்திருந்தார்.


 அரசர் மற்றும் அனைவரும் சிவபெருமானைத் தேரில் அமர்த்தி, தேர்வடம் பிடித்தார்கள். 


 என்ன ஆச்சரியம் !!


தேர் ஒரு அடி கூட நகரவே இல்லை. 


மழைக்காரணமாக சேற்றில் சிக்கிய தேர் அசையாமலும் இருந்தது. 


மன்னன், மக்கள் அனைவரும் மனம் வருந்தினார்கள்.


 அப்போது ஓர் அசரீரி கேட்டது.


 "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று அசரீரி கேட்டது. 


சேந்தனாரோ ஒன்றுமே அறிந்திடாத யான் எப்படிப் பல்லாண்டு பாடுவேன்? 


 என்று எம்பிரானை வணங்கித் தொழுது நின்றார். 


 எம்பிரானோ யாம் உனக்கு அருள்புரிவோம்! என்று அருள் புரிந்தார்.


 அப்போது சேந்தனார் "மன்னுகதில்லை" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் எம்பிரானை வாழ்த்தி வணங்கிப் பாடினார். 


உடனே, தேர் அசைந்தது.


அரசரும், சிவனடியார்களும் சேந்தனாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். 


 சேந்தனாரோ "அரசன் அடியவனின் காலில் விழ வேண்டாம்" என்று தயங்கிக் கூற, அரசரோ நடராஜப் பெருமானே தங்களின் வீட்டிற்குக் களி உண்ண வந்தார் என்றார்.


 அதைக்கேட்ட சேந்தனார் எம்பிரான் அடியவர்கள் மீது வைத்திருந்த கருணையை எண்ணி, இந்த அடியேனின் வீட்டிற்கும் வந்ததை நினைத்து பரவசமடைந்தார்.


 இதன் காரணமாக திருவாதிரை அன்று களி உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது. 


 அன்றைய தினத்தில் ஆடல்வல்லானின் அனைத்துத் திருத்தலங்களிலும் களி படைக்கப்படுகிறது.


 அதனால் தான் "திருவாதிரை அன்று ஒருவாய்க்களி" பழமொழி வந்தது. 


 ஆதிரை முதல்வனுக்கு களி செய்து வணங்கி அவரின் திருவடியை அடைவோமாக!.


திருவாதிரைக் களி செய்வது எப்படி?


 தேவையானவை: 

அரிசி - ஒரு கப்

பொடித்த வெல்லம் - ஒன்றரை கப்

தண்ணீர் - இரண்டரை கப்

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் - ஒரு கப்

முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் - சிறிதளவு.


 செய்முறை :-


அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். அரிசியை ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.


அரிசி ரவையில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேக வைக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.


 வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் காய வைத்து வடிகட்டி, கொதிக்கவிடவும். கொதிக்கும் பாகில் அரிசி ரவை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு கிளறவும். இது வெந்ததும், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும்.


 இதைத் திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு உபவாசம் இருந்து, களியைப் படைத்துவிட்டுப் பின்பு தான் உண்ண வேண்டும்.


 திரு உத்திரகோசமங்கை :-


 முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்ட ஸ்தலம் எது தெரியுமா?. 


"திருஉத்திரகோசமங்கை" இங்கு தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது.


 நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. 


இது நவக்கிரகங்களில் பச்சை நிறம் புதனின் காரகத்துவம்.


 புதனின் அதிபதி மஹாவிஷ்ணு ஆவார்.


இது ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை கொண்டது.


 "மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்" என்ற சொல்லிற்கு ஏற்ப, ஒலி ஒளி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையைப் பாதுகாக்கிறார்கள்.


 ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் கலையப்பட்டு அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசுவது வழக்கமாக இருக்கிறது.

 

 உத்திரகோச மங்கையில் சந்தனம் கலையப்பட்ட நிலையில் மரகத நடராஜரை காணலாம். 


ஆருத்ரா தரிசனம் அன்று காலை 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்படும். 


 32 வகையான அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை நடைபெறும். 


அதன் பின் வேறு எங்குமே நடைபெறாத வகையில் சிறப்பாக ஒன்று நடைபெறும்.


 அது என்னவென்றால் 


32 வகையான அபிஷேகம் செய்ததும் ஸ்வாமிக்கு பசி எடுத்து விடுமாம். 


இதனால் சுவாமிக்கு முதலில் நைவேத்தியம் சமர்ப்பிக்கிறார்கள். 


 அதன் பின்பு அலங்காரம் நடைபெறுமாம்




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,